முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோபி சிறுவனிடம் போலீசார் விசாரணை
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனை போலீஸார் எச்சரித்தனர்.
Recommended Video
கோபி: முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் மற்றும் அவனது பெற்றோரிடம் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் மாலை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், 'சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, முதல்வர் பழனிசாமி வீட்டில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது' என்று கூறிவிட்டு உடனடியாக இணைப்பை துண்டித்தார்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார், உடனடியாக தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை நடத்தினர். அந்த போன் எங்கிருந்து வந்தது என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது, ஈரோடு மாவட்டம், கோபி அருகே, காசிபாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் செல்போனிலிருந்து அந்த அழைப்பு வந்தது என தெரிய வந்ததையடுத்து, உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்தனர்.
அப்போது போனில் பேசியது, அதே பகுதியை சேர்ந்த, 12 வயது சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவன், மற்றும் அவனது பெற்றோரை எஸ்.பி. அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு சிறுவனிடம் வெடிகுண்டு மிரட்டல் குறித்து எஸ்.பி. நேரில் விசாரித்தார்.
அப்போது, தனியார் பள்ளி ஒன்றில் தான் 7-ம் வகுப்பு படிப்பதாகவும், விளையாட்டிற்காக தான் தனது அம்மாவின் செல்போனில் இருந்து கட்டுபப்ட்டு அறைக்கு வெடிகுண்டு இருப்பதாக கூறியதாகவும் சிறுவன் சொன்னான். பின்னர் பெற்றோரும், தனது மகன் விளையாட்டாக செய்துவிட்டதாகவும், இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் விளக்கம் அளித்தனர்.
இதை தொடர்ந்து, சிறுவர்களிடம் செல்போன் கொடுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு கொடுப்பதால் விளைவுகள் குறித்தும் கூறி எஸ்.பி, பெற்றோரை எச்சரித்தார். அதேபோல வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவனையும் எஸ்.பி. எச்சரித்து அனுப்பினார்.