யார் இந்த சாமி.. பொறுப்பே இல்லாதவருக்கெல்லாம் பதிலளிக்க முடியாது... பொன். ரா.. பொளேர்!
திருச்சி: பாஜகவில் ஒரு பொறுப்பிலும் இல்லாதவர் சுப்பிரமணியம் சாமி. இவருக்கெல்லாம் பதில் தர விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சுப்பிரமணியம் சாமியின் மீனவர் விரோதப் பேச்சு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சை தமிழக பாஜகவும் கண்டித்துள்ளது. ஆனால் தமிழக பாஜக பேசுவது குறித்தெல்லாம் பதிலளிக்க மாட்டேன் என்று சாமி பேசி வருகிறார்.
இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு வந்திருந்தபோது சாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ராதாகிருஷ்ணன் அளித்த பதில்...
ஷா, மோடி பேசினா சொல்லலாம்
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பொறுப்பில் உள்ள தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தால் அதற்கு பதிலளிக்கலாம். கட்சியில் பொறுப்பில் இல்லாத சுப்பிரமணியன்சுவாமி மீனவர்கள் குறித்துதெரிவித்த கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது
இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்படும் மீனவர்கள், அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் நிரந்த தீர்வு காணப்படும்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம்
முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீர்வு கண்டது போல, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட காவிரி பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தீர்வு காண முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அறிவேன்.
மத்தியஅரசின் ஒத்துழைப்பு அவசியம்
எந்தவொரு பிரச்னையிலும் தீர்வு காண மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நல்ல தீர்வு கிடைக்கும். அதுபோல, காவிரி பிரச்னையிலும் தீர்வு காண மத்திய அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.