ஆர்.கே. நகரில் ஜெயித்து விட்டு அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க சசிகலாவுக்கு சவால்!
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவினால் அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. அக்கட்சியின் உயர்பதவியான பொதுச்செயலாளரின் கட்டுப்பாட்டில்தான் கட்சி இருக்கும் என்பதால் வலிமை வாய்ந்த அந்த பதவிக்கு போயஸ் தோட்ட வீட்டில் உள்ள சசிகலா தலைமையேற்க வேண்டும் என்று எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தினசரியும் மாவட்ட நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் சசிகலாவை சந்தித்து கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் அவருக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உள்ளது. குறிப்பாக பெண் தொண்டர்கள் சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பது தெரியவருகிறது.
திருவண்ணாமலை சம்பவம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார், அதிமுகவின் பொதுச் செயலாளராக 'சின்னம்மா சசிகலாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகி ஒருவர், 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவை மட்டுமே அம்மாவாக ஏற்றுக்கொள்ளப்படும். மற்றவர்களை அம்மாவாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். ஆத்திரமடைந்த அமைச்சரின் ஆட்கள் அவரை சரமாரிய அடித்து உதைத்து கூட்டத்தை விட்டு வெளியேற்றினர்.
பேனர்கள் கிழிப்பு
சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாத அதிமுகவினர், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மூலம் ஆரணியில் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட பேனர்களை கிழித்து எறிந்தனர். தென் மாவட்டங்களில் மட்டுமல்லாது அவரது சொந்த மாவட்டத்திலேயே எதிர்ப்பு வலுத்துள்ளது. போஸ்டரில் சாணம் அடித்து வருகின்றனர்.
நீதிமன்றத்தில் வழக்குகள்
அதிமுக சட்டவிதிப்படி, சசிகலா தொடர்ந்து, 5 ஆண்டுகளாக உறுப்பினராக இல்லாததால், அவர் பொதுச்செயலர் பதவிக்கு போட்டி யிடும் தகுதியை இழக்கிறார். இந்த அம்சத்தை கூறி, ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா,உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து, வி.கே. சசிகலாவிற்காக கட்சியின் விதிகள் தளர்த்தப் படும்' என பொன்னையன் அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆர். கே. நகரில் போட்டி
வி.கே. சசிகலா, ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்று இப்போது நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி சசிகலாவை சந்தித்து தீர்மான நகலை அளித்து வலுகின்றனர்.
ஜெயிக்க முடியுமா?
இந்த நிலையில் சசிகலாவிற்கு எதிராக ஆர்.கே. நகர் தொகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நின்று வென்று பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள் என்று அதிமுக தொண்டர்கள் சிலர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அம்மாவின் மரணம் குறித்து கோடிக்கணக்கான மக்ககளை அறியச் செய்ய வேண்டும் என்றும் என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.