சசி குடும்பம் பாம்பு,ஓபிஎஸ் ஈபிஎஸ் அணி ஏணி... எப்படியிருக்கு அதிமுக பரமபதம்?
அதிமுக அரசியல் பரமபதத்தில் சசிகலா குடும்பத்தினர் பாம்பு போல செயல்படுவதாக சித்தரித்து சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : அதிமுக அரசியல் பரமபதத்தில் சசிகலா குடும்பத்தினரை பாம்பு போலவும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணியினரை ஏணி போல சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவின் இரு அணிகள் இணைந்த நிலையில் இவர்கள் தான் கட்சியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று தொண்டர்கள் மத்தியில் நினைப்பை விதைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தினகரன் தரப்பினர் முதல்வர் பழனிசாமி தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் என்று இரண்டு நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கு கட்டியம் கட்டுவது போல தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி மற்றும் தோப்பு வெங்கடாச்சலம் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தனர். முதல்வர் பழனிசாமி, தினகரன் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரத்தினசபாபதி எம்எல்ஏ ஒப்புகொண்டார். தினகரன் தலைமையில் கட்சியை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நோ சசிகலா குடும்பம்
ஆனால் சசிகலா குடும்பத்தினர் கட்சியிலேயே இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை ஒருங்கிணைந்த அதிமுக எடுத்துள்ளதாக தெரிகிறது. சசிகலாவின் நியமனத்தை நீக்க பொதுக்குழு, செயற்குழு கூடி புதிய பொதுச்செயலாளரை நியமிக்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
பரபரப்பு
எனவே விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு அந்தக் கட்சியின் ஜனநாயக ரீதியில் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதனால் கட்சியில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக கார்ட்டூன்
இந்நிலையில் சென்னை எழும்பூர் பகுதிகளில் அஇஅதிமுகவின் அரசியல் பரமபதம் என்று ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பிரசாத்சிங், கணேஷ், கோபால் என்று தங்களின் பெயர்களோடு இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளவர்கள் ஒருகிணைந்த அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
மாப்பியாக்களிடம் எச்சரிக்கை
அதிமுக பரமபத போஸ்டரில் சசிகலா மற்றும் அவரது சுதாகரன், தினகரன், திவாகரன், நடராஜன், இளவரசி, ராகவன், ஜெயானந்த், விவேக் ஆகியோரின் படங்கள் போடப்பட்டு அவர்கள் பாம்பு போல உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். இதே போன்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன், பி.எச்.பாண்டியன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் ஏணி போல சித்தரிக்கப்பட்டுள்ளனர். மாப்பியாக்களிடம் எச்சரிக்கை என்று அச்சிடப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.