அழகிரி மோதல் ஒரு குடும்ப நாடகம்- பிரேமலதா விஜயகாந்த்!: திமுக- தேமுதிக கூட்டணி இல்லை?!

லோக்சபா தேர்தலில் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்து திமுக காத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் பாரதிய ஜனதாவும் நம்பிக்கையோடு தங்களது அணிக்கு எப்படியும் தேமுதிக வந்துவிடும் என்று காத்திருக்கிறது.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டுப் பணிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பார்வையிட்டார்.
அப்போது திமுகவில் நிகழ்ந்து வரும் உட்கட்சி மோதல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரேமலதா, ஒரு மூத்த அரசியல்வாதி, மிகப் பெரிய தலைவர் என்றெல்லாம் பெயரெடுத்தவர், வீட்டுக்குள் பேச வேண்டியதை வெளியில் பேசுகிறார்.
அதற்கு அவரது மகனும் மீடியாவில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு குடும்பத்தின் டிராமா வெட்ட வெளிச்சமாக தமிழக மக்களுக்கு தெரிந்துகொண்டிருக்கிறது.
இதன் மூலமாக அனுதாபத்தை பெற வேண்டும் என்பது அவர்களின் எண்ணமா? அல்லது யாரையாவது கூட்டணிக்குள் கொண்டுவரவேண்டும் என்பது அவர்களின் எண்ணமா? என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
ஆனால் எந்தவித டிராமாவுக்கும் தே.மு.தி.க. அடி பணியாது. எல்லா டிராமாவையும் கேப்டன் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். இதற்கான முடிவு என்ன என்பதை வரும் 2ம் தேதி நடக்கும் மாநாட்டில் மக்கள் முன் கேப்டன் தெரிவிப்பார் என்றார் பிரேமலதா.
திமுகவை நேரடியாக தாக்கி பிரேமலதா பேசியிருப்பதன் மூலம் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்காது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications