முத்தூட் மினி பைனான்ஸ் மேனேஜர் ரூ. 40 லட்சம் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கத்தோடு தலைமறைவு
செங்கோட்டை: செங்கோட்டையில் செயல்பட்டு வரும் முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
செங்கோட்டை பேருந்து நிலையம் எதிரே கேரள மாநிலத்தைச் சேர்ந்த முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களது தேவைகளுக்காக தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் மேலாளராக செங்கோட்டை காலாங்கரையைச் சேர்ந்த சங்கர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தீடீர் என வேலைக்கு செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் மண்டல மேலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் ஒரு குழுவினர் அங்கு வந்து இருப்பில் இருக்கும் அடகு நகைகளை சோதனை செய்ததில் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ஏலத்திற்கு விடப்பட வேண்டிய நகைகளையும், ரொக்கம் ரூ.1 லட்சத்தையும் காணவில்லை. இதை மேலாளர் சங்கர் எடுத்துக் கொண்டு தலைமறைவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து நிறுவனத்தின் அனுமதியோடு மண்டல மேலாளர் பாலசுப்ரமணியன் செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மேலாளர் சங்கருக்கு நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளதும், அதன் காரணமாக நிறுவனத்தின் தலைமையை மிரட்டும் எண்ணத்தில் தங்க நகைகளையும், பணத்தையும் அவர் எடுத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தென்காசி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அரவிந்தன் தனியார் நிதி நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார். இந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலாளர் எடுத்துச் சென்ற நகைகள் அனைத்தும் ஏலம் விடப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.