மதுரையை உலுக்கிய மாணவ, மாணவியர்கள்.. தொடர் போராட்டத்தால் பரபரப்பு!
மதுரை தமுக்கம் மைதானத்தில் நீட் தேர்வை ரத்து செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர் போலீசார்.
மதுரை : ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த மதுரை தமுக்கம் மைதானத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசை வலியுறத்தியும் மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போரோட்டத்தில் ஈடுபட்டனர். தமிழன்னை சிலை மீது ஏறிப் போராடிய அவர்களை போலீஸார் கடும் சிரமப்பட்டு அகற்றினர். பின்னர் சிலை முன்னர் கூடியமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி கூடிய மாணவர்களை போலீசார் தரையில் இழுத்துச் சென்றும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். சமூக வலைதளங்கள் மூலமாக இந்த இடத்தில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இந்த இடத்தில் தான் பிரம்மாண்ட போராட்டம் நடந்தது என்பதால் மாணவர்களை ஒன்றுகூட விடாமல் போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

போராட்டத்தால் பரபரப்பு
இந்தப் போராட்டம் காரணமாக தமுக்கம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்களின் திடீர் போராட்டத்தால் மதுரை நகரம் காலை முதல் பரபரப்பாக காணப்படுகிறது.

தள்ளாகுளத்தில் மறியல்
இதனிடையே தமுக்கம் மைதானம் பகுதியில் மாணவர் அமைப்பினரின் போராட்டத்தையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் தமுக்கம் மைதானம் பகுதிக்கு செல்லாமல் மாணவர்கள் தள்ளாக்குளம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தள்ளாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் அமர்ந்து கோஷம்
சாலையில் அமர்ந்து ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நீட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்தால் மட்டுமே போராட்டங்கள் ஓயும் என்று மாணவர்கள் கோரி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வலுக்கட்டாயமாக கைது
இதனையடுத்து பள்ளி மாணவிகளை பெண் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதே போன்று போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகளை வலுக்கட்டாயமாக போலீசார் அகற்றினர்.












Click it and Unblock the Notifications