முதல்வர் எடப்பாடியின் வாக்குறுதியை வாளி நீரில் எழுதி நெடுவாசலில் 'ஓரங்கநாடகமாக' போராட்டம்!
ஹைட்ரோகார்பன் தொடர்பான நெடுவாசலில் போராட்டம் தொடருகிறது. நேற்று ஓரங்கநாடக வடிவில் போராட்டம் நடைபெற்றது.
நெடுவாசல்: ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் வாளி நீரில் அவரது உறுதிமொழியை எழுதி நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் மக்களின் போராட்டம் முதல் கட்ட போராட்டத்தையும் சேர்ந்து 100 நாட்களை கடந்து நடைபெறுகிறது. 2-வது கட்ட போராட்டம் நேற்று 81-வது நாளைத் தொட்டது.

அப்போது வழக்கம் போல மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் ஓரங்க நாடகம் போல ஒருகாட்சி நடத்தப்பட்டது. இந்த காட்சி விவரம்:
தமிழக அரசு பிரதிநிதி: ஏன் இவ்வளவு கூட்டமாக இருக்கிறீர்கள்?
நெடுவாசல் மக்கள்: ஹைட்ரோகார்பனை ரத்து செய்ய வலியுறுத்துகிறோம்.
தமிழக அரசு பிரதிநிதி: அந்த திட்டம் வராது.. முதல்வரே சொல்லிவிட்டார்... வீட்டுக்கு போய் வேலையை பாருங்க...
நெடுவாசல் மக்கள்: சட்டசபையில் இதற்கு தீர்மானம் கொண்டுவாங்க
தமிழக அரசு பிரதிநிதி: தீர்மானம் கொண்டுவரவும் மாட்டோம்... ஹைட்ரோ கார்பனும் வராது
நெடுவாசல் மக்கள்: அய்யா வாளியில் இருக்கும் இந்த எழுத்தை கொஞ்சம் படிக்க முடியுமா?
தமிழக அரசு பிரதிநிதி: எழுத்தையே காணோமே..
நெடுவாசல் மக்கள்: அப்படித்தான் இருக்கு உங்கள் முதல்வர் எடப்பாடியின் பழனிச்சாமியின் ஹைட்ரோகார்பன் தொடர்பான வாக்குறுதியும்...
இப்படியாக ஒரு ஓரங்க நாடகத்தை நடத்தி தங்களது எதிர்ப்பை நெடுவாசல் மக்கள் வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications