26 நாள் வயது குறைந்ததால் மருத்துவ சீட் கிடையாதாம் இந்த மாணவனுக்கு.. ஜெ. தலையிடுவாரா?
சென்னை: அரசின் விதிமுறைகளைப் பார்த்தால் விசித்திரமாகத்தான் இருக்கிறது. ஒரு மாணவரை பிளஸ்டூ வரை படிக்க விட்டு விட்டு, அதில் அந்த மாணவன் நல்ல மதிப்பெண்களயைும், தேவையான கட் ஆப் மார்க்கையும் பெற்ற நிலையில் இப்போது உனக்கு வயது குறைவாக உள்ளது, உனக்கு சீட் கிடையாது என்று சொல்லி அந்த ஏழை மாணவனின் நெஞ்சில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுள்ளது தமிழக அரசின் கல்வித்துறை.
என்ன செய்வது என்று தெரியாமல், தனது மருத்துவராகும் கனவு தகர்கிறதே என்று பெரும் உளைச்சலில் அந்த மாணவன் உள்ளார். தமிழக அரசு தனக்கு கருணை காட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோர்ட்டுக்குப் போய் வழக்குப் போட்டு நியாயம் பெறக் கூடிய அளவுக்கு தனக்கு வசதி இல்லை என்றும் அந்த மாணவர் பரிதாபமாக கூறுகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு. விவசாயக் கூலியாக இருந்தவர். தற்போது உடல் நலம் சரியல்லை. வேலை பார்க்கவும் முடியவில்லை. இவரது மனைவி இந்துராணி. இவரும் கூலித் தொழிலாளிதான்.
இவர்களது மகன் ராமானுஜம். அரசுப் பள்ளியில் படித்தவர். 10வது வகுப்பில் 452 மதிப்பெண்களையும், பிளஸ்டூவில் 1101 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். மருத்துவராவதுதான் இவரது நீண்ட கால கனவு. இதற்குத் தேவையான கட் ஆப்பான 194.50 மார்க்கும் வைத்துள்ளார். ஆனால் இவருக்கு கவுன்சிலிங்குக்கு அழைப்பு இல்லை.
என்ன என்று விசாரித்தபோதுதான் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளனர். அதாவது, 17 வயது நிறைவடைய இன்னும் 26 நாட்கள் இருப்பதால் வயது குறைவாக உள்ளது என்றும் அதனால் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள தகுதி இல்லை என்றும் கூறி விட்டனராம்.
இதுகுறித்து ராமானுஜம் கூறும்போது, பிளஸ் 2 தேர்வு எழுதும் வரை என் வயது பற்றி எந்த தடையும் சொல்லவில்லை. அதன் பிறகு தேர்வு முடிவில் நல்ல மதிப்பெண் கிடைத்ததால் எனக்கு மருத்துவ சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விண்ணப்பித்தேன். முதல்கட்ட கவுன்சிலிங் நடந்த போது அழைப்பு இல்லை. மறு கவுன்சிலிங்குக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தேன் அதற்கும் இல்லை.
அதன் பிறகு கல்வித்துறை அதிகாரிகளை கேட்டால் 26 நாட்கள் வயது குறைவாக உள்ளதால் மருத்தவபடிப்பிற்கு தகுதி இல்லை என்று சொல்கிறார்கள். இதனால் என் டாக்டர் கனவு தகர்ந்து கொண்டிருக்கிறது. பெரும் மன உளைச்சலாக உள்ளது. வசதி படைத்தவராக இருந்தால் நீதிமன்றத்திற்கு சென்று சீட் வாங்க முயற்சிக்கலாம். அதற்கும் வழியில்லை. அன்றாடம் கூலி வேலை செய்தால் தான் சாப்பாடு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் எப்படி நீதிமன்றம் வரை செல்வது. அதனால் 26 நாட்கள் வயது குறைவு என்பது தமிழக அரசு கருணை அடிப்படையில் தளர்வு கொடுத்தால் நிச்சயம் அந்த சீட் எனக்கு கிடைக்கும் என்று வேதனையுடன் கூறுகிறார் ராமானுஜம்.
அரசு கருணை காட்டுமா...!