மக்கள் நலக்கூட்டணி - தேமுதிகவின் வலிமை பொறுக்காதவர்கள் வதந்தி பரப்புகிறார்கள்- திருமாவளவன்
சென்னை: மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக இணைந்து வலிமையான கூட்டணி அமைந்துள்ளது. இந்த அணி மேலும் வலிமைப் பெறும். இது பொறுக்க முடியாதவர்கள் வதந்தி பரப்புகிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதிமுக தலைமையகமான தாயகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, 4 கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும் தாங்கள் ஆலோசித்துள்ளதாகக் கூறிய அவர், இது தொடர்பாக, தேமுதிகவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
ஆலோசனையின் முடிவில், மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை அறிவிக்கப்படும் என வைகோ குறிப்பிட்டார்.
எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் வைகோ தெரிவித்தார்.
இதனிடையே சென்னையில் நடந்த தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி பிரச்சார பாடல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திருமாவளவன், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தமாகாவுடன் பேசி வருவதாகவும், கூட்டணி ஆட்சி கனவு நிறைவேறும் நேரம் வந்து விட்டதாகவும் அவர் கூறினார்.
மக்கள் நல கூட்டணியில் ஜிகே. வாசன் இணைய இருப்பதால் ஈவிகேஎஸ். இளங்கோவன் போன்றோர் குழப்பத்தில் பிதற்றி வருகினர் என திருமாவளவன் கூறினார்.
மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக தொகுதி பங்கீடு பற்றி ஒருங்கிணைப்பாளர் வைகோவும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இன்று அறிவிப்பார்கள் என்று கூறிய திருமாவளவன், ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினார். எங்களின் கூட்டணி மேலும் வலிமை பெறுவதை பொறுக்க முடியாதவர்கள், எங்களைப் பற்றி வதந்தி பரப்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.