விஜயகாந்த் பிறந்த நாள்... ஒற்றுமையாக "பீனிக்ஸ்" கேக் ஊட்டி வைகோ உள்ளிட்ட ம.ந.கூ. தலைவர்கள் வாழ்த்து
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான வைகோ, திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது "பீனிக்ஸ்" என எழுத்துகள் பொறிக்கப்பட்ட பிரமாண்ட கேக்கை வெட்டி மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்துக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.
விஜயகாந்தின் 65-வது பிறந்த நாள் நள்ளிரவு முதல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தேமுதிக அலுவலகத்துக்கு இன்று மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் செயலர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலர் முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சென்றனர்.
வைகோ உள்ளிட்ட தலைவர்கள் விஜயகாந்துக்கு சால்வை அணித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பீனிக்ஸ் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட பிரமாண்ட கேக் வெட்டி விஜயகாந்துக்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கேக் ஊட்டி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் விஜயகாந்தும் கேக் ஊட்டிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை சந்திக்காமல் ஒதுங்கியே இருந்தார் விஜயகாந்த்.
சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் "பீனிக்ஸ்" பறவை போல மீண்டும் எழுந்து வருவோம் என விஜயகாந்த் கூறியிருந்தார். தற்போதும் அதை வெளிப்படுத்தும் வகையில் பிறந்த நாள் கேக்கிலும் "பீனிக்ஸ்" என எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய இந்த சந்திப்பின் மூலமும் "பீனிக்ஸ்" கேக் வெட்டியதன் மூலமும் உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கை கோர்க்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications