திருமா இல்லாத மநகூ... அஜெண்டாவை செயல்படுத்த துடியாய் துடிக்கும் வைகோ, இடதுசாரிகள்!
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகளை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மதிமுக, இடதுசாரிகள் செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: "விடுதலைச் சிறுத்தைகள் இல்லாத "மநகூ" இதுதான் மதிமுகவினரின் தற்போதைய கோரிக்கை.. இதை செயல்படுத்தவே விடுதலைச் சிறுத்தைகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ செயல்படுவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
மக்கள் நலக் கூட்டணிக்கான முதல் அடையாளமே சட்டசபை தேர்தலின் போது மதுரையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம்தான்... அந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு காரணமே விடுதலைச் சிறுத்தைகள்தான் என ஊடகங்கள் சுட்டிக்காட்டின.
அங்கிருந்துதான் விடுதலைச் சிறுத்தைகள் மீதான மதிமுகவின் அதிருப்தி தொடங்குகிறது... விடுதலைச் சிறுத்தைகள் இருந்தால் பிற ஜாதி வாக்குகள் கிடைக்காது என்ற எண்ணம் திமுகவுக்கு மட்டுமல்ல... மதிமுகவினருக்கும் உண்டு.
பொங்கும் மதிமுக
மதிமுகவினரைப் பொறுத்தவரையில் மக்கள் நலக் கூட்டணியில் நாங்கள்தான் பெரிய கட்சி; அனைத்து கிராமங்களிலும் எங்களுக்கு கிளை கழகங்கள் உண்டு; ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சேரிகளில்தானே கிளை கழகங்கள் இருக்கின்றன என சிந்தனை அப்பட்டமானதாக இருக்கிறது. ஆகையால் மக்கள் நலக் கூட்டணியின் பலமே விடுதலைச் சிறுத்தைகள் என ஊடகங்கள் எப்படி எழுதலாம் என பொங்குகின்றனர்.
திருமா இல்லா கூட்டணி
விடுதலைச் சிறுத்தைகள் இல்லாத மக்கள் நலக் கூட்டணிதான் மிகச் சரியானது; திருமாவளவனை நாங்கள் ஒரு தமிழ்த் தேசியவாதியாகத்தான் கருதிவந்தோம்... ஆனால் நடைமுறையில் அவர் அப்படி இல்லை என்கிற குற்றச்சாட்டையும் மதிமுகவினர் வைக்கின்றனர்.
ஆட்சேர்ப்பு வாதம்
எங்களுக்கு மட்டுமல்ல.. இடதுசாரிகளும் கூட விடுதலை சிறுத்தைகள் இல்லாத மக்கள் நலக் கூட்டணியைத்தான் விரும்புகின்றன என்றும் 'ஆட்சேர்ப்பு' வாதங்களையும் மதிமுகவினர் முன்வைக்கின்றனர்.
திருமாவுக்கு நெருக்கடி
இந்த சூழ்நிலையில் திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம்; ஆலோசனை நடத்தப் போகிறோம் என திருமாவளவன் கூறிய போதும் வைகோ தன்னிச்சையாக, திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும் என அறிவித்து விடுதலை சிறுத்தைகளை நெருக்கடிக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இருந்தபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது.. 3 தொகுதி தேர்தலில் போட்டியிடாத நிலையில் அதை காரணமாக வைத்து திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு போக கூடாது என மீண்டும் திருமாவளவனை இக்கட்டில் தள்ளிவிட்டனர் மநகூ தலைவர்கள்...
வெளியேற்ற முயற்சி
எப்படியாவது விடுதலைச் சிறுத்தைகளை வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் மதிமுகவும் இடதுசாரிகளும் கை கோர்த்து செயல்படுகின்றனர்... திருமாவும் எத்தனை காலம் 'பெரும்பான்மை' கட்சிகளின் கருத்து ஏற்று பொறுமை காப்பார் என்பதுதான் தற்போதைய கேள்வி.