வெயில் தாங்கலையே... ஏசி காரில் வந்து ஓட்டு கேட்ட தீபா... கொதித்த ஆர்.கே. நகர் வாக்காளர்கள்
வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் ஏசி காருக்குள் அமர்ந்து வாக்குசேகரித்த தீபாவிற்கு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை: ஆர்.கே. இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த தீபா வெயிலை தாங்க முடியாமல் ஏசி காரில் சென்றதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து திறந்த வெளி ஜீப்பில் அவர் வாக்கு சேகரித்தார். நடந்து சென்று வாக்கு சேகரித்த போது தீபாவிற்கு பூ தூவி வரவேற்பு கொடுத்தனர்.
ஆர்.கே.நகரில் தொண்டர்களை 2 மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்துவிட்டு தாமதமாக பிரச்சாரத்திற்கு வந்த தீபா, ஒரு நிமிடம் மட்டும் திறந்த வாகனத்தில் இருந்து வாக்குசேகரித்த பிறகு, வெயிலைப் பொறுக்க மாட்டாமல் ஏசி காருக்குள் சென்று அமர்ந்தபடியே வாக்குசேகரித்தார். இதற்கு ஆர்.கே. நகர் தொகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, வெயிலில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலாவை பிடிக்காதவர்களுக்கு தீபாவே ஆபத்பாந்தவனாக தெரிந்தார். இதனால் பலரும் தீபா வீடு முன்பு குவிந்தனர். ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் தனி அணியாக செயல்படுகிறார். இதனால் பல தொண்டர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவர் பக்கம் சாய்ந்தனர்.

தீபா பேரவை
ஜெயலலிதா பிறந்தநாளில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற பெயரில் தனி அமைப்பை தொடங்கிய தீபா, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் படகு சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்த கையோடு தீபா பிரச்சாரம் செய்து வருகிறார். தீபாவின் முதல் பொதுக்கூட்டத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் தீபாவோ, எழுதி வைத்ததை வாசித்து விட்டு சீக்கிரமாகவே புறப்பட்டு சென்று விட்டார்.

2 மணி நேரம் தாமதம்
சொன்ன நேரத்தில் வராமல் போலீஸ் பாதுகாப்புடன் 2 மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு வந்தார். உடனே தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் திறந்த வாகனத்தில் ஏறி நின்று பிரச்சாரத்தை தொடங்கினார் தீபா.

வெயில் தாங்கலையே
பிரச்சாரத்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே வெயிலை பொறுக்க முடியாமல் பின்னால் வந்து கொண்டிருந்த தனது ஏசி காருக்குள் சென்று தீபா அமர்ந்து கொண்டார். காரின் கதவுகளின் கண்ணாடிகளையும் மூடியபடி தீபா உள்ளே அமர்ந்திருக்க அவருக்காக அவரது ஆதரவாளர்கள் வாக்கு சேகரித்தனர்.

தொண்டர்கள் எதிர்ப்பு
தீபாவின் செயலுக்கு அங்கிருந்த பொதுமக்களும் தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளியில் வந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனையடுத்து காரில் இருந்து இறங்கிய தீபா, நேரு நகர் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று ஓட்டு கேட்டார்.

அம்மா வந்துட்டாங்க
நேரு நகர் பகுதியில் வீதியில் இறங்கியும் ஓட்டு கேட்டார். அங்குள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்கள் தீபாவை பார்த்ததும் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். எங்கள் அம்மாவே வந்துட்டாங்க என்று கூறியபடி தீபாவை கட்டி அணைத்தனர்.

மலர்தூவி வரவேற்பு
அவர்களை கட்டிப் பிடித்து மகிழ்ச்சியை பரிமாறி கொண்ட தீபா புன்முறுவலுடன் ஆதரவு கேட்டார். பின்னர் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு கேட்டார். அப்போது வீட்டு மாடிகளில் இருந்து பெண்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.

குடை பிடித்த பெண்கள்
திறந்த வாகனத்தில் ஏறி பிரச்சாரத்தை தொடங்கிய தீபாவுக்கு அருகில் இருந்த பெண்கள் குடை பிடித்தபடி வந்தனர். தீபாவின் பிரச்சாரத்திற்கு பவுன்சர்கள் எனப்படும் தனியார் நிறுவன பாதுகாவலர்களும் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் செய்தி சேகரிப்பவர்கள் உள்ளிட்ட அனைவரையும் மிரட்டி விரட்டிக் கொண்டிருந்தனர்.

மக்களுக்கான நான்
தனது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாக கூறும் தீபா, சசிகலா, ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளையும் விமர்சனம் செய்கிறார். தான் வெற்றி பெற்றால் ஆர்.கே. நகரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என்றும் கூறி வருகிறார். மக்களால் நான்... மக்களுக்காக நான் என்று தீபா பேசுவதற்கு கை தட்டல் விழாவே செய்கிறது. அவை வாக்குகளாக மாறுமா என்பதே அனைவரின் கேள்வி.












Click it and Unblock the Notifications