இரவில் புழுக்கம் இருக்காது... மாலை நேர மழை தொடரும்: வானிலை மையம் ஜில் அறிவிப்பு
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாகவே வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது.
பகல் நேரங்களில் மேகமூட்டம் காணப்பட்டாலும் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் இரண்டு தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் குறிப்பாக காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 2 தினங்களுக்கு தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், வட தமிகத்தில் ஓரிரு பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் கூறினார்.
அதிகபட்சமாக சென்னை, மகாபலிபுரம், செய்யாறு காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார். திருவள்ளூர் மற்றும் காட்டுப்பாக்கம் பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications