தமிழக முதல்வர் நாற்காலியில் ரஜினி அமரப்போவது உறுதி ... சொல்வது தமிழருவி மணியன்
தமிழக முதல்வர் நாற்காலியில் ரஜினி அமரப்போவது உறுதி என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் : தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் ரஜினி அமரப்போவது உறுதி என்றும், தமிழகத்திற்கான நல்லாட்சியை ரஜினியால் தான் வழங்க முடியும் என்றும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சாவடி அருகேயுள்ள காந்தி பூங்கா மற்றும் காந்தி சிலையை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழருவி மணியன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தைக் கடந்த 50 ஆண்டுகளாக ஆண்ட திராவிடக்கட்சிகள் அழித்துவிட்டனர். தற்போதைய சூழலில் உடனடியாக அரசியல்மாற்றம் தேவைப்படுகிறது.
இந்த இரண்டு விஷயங்களையும் மனதில் வைத்துத்தான் ரஜினி அரசியலுக்கு வருகிறார். தமிழகத்தின் நிலை குறித்து எதாவது சொன்னால், உடனடியாக விமர்சனம் செய்யும் அரசியல்வாதிகள் கேள்விக்கு விளக்கம் சொல்லத் தயாராக இல்லை.
ஆனால் ரஜினியின் அரசியல் அவ்வாறு இருக்காது. மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கம். எனவே, அவரை முதல்வராக்கினால் ரஜினி நிச்சயம் மக்களுக்கான ஆட்சியைக் கொண்டு வருவார்.
நிச்சயம் தமிழகம் இந்தியாவிலேயே முன்மாதிரியான மாநிலமாக விளங்கும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், தமிழக முதல்வர் நாற்காலியில் ரஜினி அமரப்போவது உறுதி. அதை வலியுறுத்தித்தான் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் கோவை மாநகரில் மே 20ம் தேதி மாநாடு நடக்க இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.