7 தமிழர்கள் விடுதலையில் தமிழக அரசால் இதைத்தான் செய்ய முடியும்.. இறுதி முடிவு யார் கையில் தெரியுமா?
Recommended Video

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்யும், விவகாரம் இப்பொழுது ஆளுநர் கையில் தான் உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது சிபிஐயால் விசாரிக்கப்பட்டது என்பதால் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு.
ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்ய சட்டப்பிரிவு 435 கீழ் மத்திய அரசு அனுமதி அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதம் முன்வைக்கப்பட்டது.

சட்டப்பிரிவு
மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த போது சட்டப்பிரிவு 435ன் கீழ் தான் விடுதலை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட சட்டப்பிரிவு 161ன் கீழ் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு பரிந்துரை செய்ய முடியும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

இறுதி முடிவு
எனவே தமிழக அரசுக்கு ஏழு பேரை விடுதலை செய்யும் அதிகாரம் உள்ளது என்றாலும் கூட, அதில் இறுதி முடிவு எடுக்கப் போவது என்னவோ ஆளுநர்தான் என்பதுதான் இதில் முக்கியமான விஷயம். ஏனெனில் மாநில அரசால் செய்ய முடிவது என்னவென்றால் அமைச்சரவையை கூட்டி ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி அதை மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு, அனுப்பி வைப்பது மட்டுமே.

சிறை கைதிகள் விடுதலை
அரசு 161 வது விதியின் கீழ் எடுத்த இந்த முடிவை ஏற்பதும், அல்லது, அதில் திருத்தங்கள் செய்வதும், ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். இதற்கு உதாரணம் கூற வேண்டுமானால், தலைவர்களின் பிறந்த நாட்களின் போது நன்னடத்தை அடிப்படையில் நீண்ட காலம் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யும் முடிவை மாநில அரசு எடுப்பது வழக்கம். அதுபோல ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு பரிந்துரை செய்யத்தான் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அனுப்பப்படும் பட்டியலில் ஆளுநர், திருத்தங்கள் செய்த மரபு இதற்கு முன்பாக உள்ளது. எனவே மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு அப்படியே ஆளுநர் சம்மதிப்பார் என்று உறுதியாகக் கூறமுடியாது.

மத்திய அரசின் பங்கு
ஆளுநர் என்பவர் மாநிலங்களின் முக்கிய நிலவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையாக அனுப்ப கூடியவர். எனவே முன்னாள் பிரதமர் ஒருவரின் கொலை வழக்கு சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயத்தில், சிறையில் உள்ளோரை விடுதலை செய்வது தொடர்பான நடவடிக்கையை தன்னிச்சையாக எடுக்க வாய்ப்பில்லை. மத்திய அரசின் ஆலோசனை அவர் பெறக்கூடும். எனவே ஆளுநர் மத்திய அரசிடம் கலந்தாலோசித்த பிறகு, என்ன முடிவை அறிவிக்கப் போகிறார் என்பதில்தான், ஏழு பேரின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள்.












Click it and Unblock the Notifications