தைலாபுரத்தில் ஒரு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்.. உலகிலேயே மிகத் தூய்மையானது.. "ஆய்வு செய்த" ராமதாஸ்
திண்டிவனம்: தான் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்தில் மரங்கள் மூலம் ஆக்சிஜன் கிடைப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் நான் வாழும் தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தான் உலகின் தூய்மையான ஆக்சிஜன் ஆகும்.
இது விற்பனைக்கு அல்ல. இலவச வினியோகம் தான்.
அந்த ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை இன்று காலை சுமார் அரை மணி நேரம் ஆய்வு செய்தேன். அனைத்தும் மிகச்சரியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உற்பத்தி நிலையம்
நான் சொல்வது உங்களுக்கெல்லாம் நன்றாக புரியும் என்று நினைக்கிறேன். நாம் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை மரங்களும், தாவரங்களும் தான் தருகின்றன. எங்கள் தோட்டத்தில் ஓங்கி வளர்ந்துள்ள மரங்களையும், தாவரங்களையும் தான் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் என்று குறிப்பிட்டேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள்
இயற்கையோடு அவர் இணைந்திருக்கும் படங்களையும் பதிவு செய்துள்ளார். ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இயற்கையை காப்போம் என்ற அளவில் மரம் நடுதல், பிளாஸ்டிக்கை ஒழித்தல் உள்ளிட்ட செயல்களில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொழிற்சாலைகள்
அந்த வகையில் மரம் நடுவதன் அவசியத்தை டாக்டர் ராமதாஸ் சமூக பொறுப்புணர்வோடு பதிவிட்டுள்ளார். மரங்களை வெட்டி, காட்டை அழித்து வேலைவாய்ப்புகள் என்ற பெயரில் பல்வேறு தொழிற்சாலைகளை அமைப்பது தவறு என்பது இந்த கொரோனா நமக்கு உணர்த்திவிட்டது.

எதிர்பார்ப்பு
உலகெங்கும் பரவிக் கிடக்கும் தூய்மையான காற்று இல்லாமல் இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். இதன் பிறகாவது மரம் நடுதலையும் அதன் அவசியத்தையும் மக்கள் உணர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications