வீழ்ந்தார் ராஜபக்சே- பட்டாசு வெடித்து கொண்டாடிய கொண்டாடிய பாம்பன் மீனவர்கள்
ராமேஸ்வரம்: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததை பாம்பன் மீனவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் மைத்ரி பால சிறிசேனவிடம் முன்னாள் அதிபர் ராஜபக்ஷே படுதோல்வி அடைந்தார்.
ராஜபக்சேவின் இத்தோல்வியை ராமேஸ்வரம் மீனவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இலங்கை கடற்படையினரால் நாள்தோறும் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
அப்படி சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை விடுவிக்காமல் இலங்கை அரசு தங்கள் பிடியிலேயே வைத்துள்ளது. ராஜபக்சேவின் இந்த செயலை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் பல கோடி மதிப்புள்ள படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
அப்படிப்பட்ட ராஜபக்சே இந்த தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்பதே தமிழக மீனவர்களின் எண்ணமாக இருந்தது. தற்போது, தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததன் மூலம் தமிழக மீனவர்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது.
இதனை கொண்டாடும் வகையில், பாம்பன் ஊராட்சிமன்ற தலைவரும், ம.தி.மு.க ஒன்றிய செயலாளருமான பேட்ரிக் தலைமையில் மீனவர்களும், ம.தி.மு.கவினரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டனர்.