பண புகார்கள் வந்தாலும் திட்டமிட்டபடி ஆர்கே நகர் தேர்தல் நடைபெறும்... தேர்தல் ஆணையம்
பண புகார்கள் வந்தாலும் திட்டமிட்டபடி ஆர் கே நகருக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆர்.கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகியன போட்டியிடுகின்றன. இன்னும் வாக்கு பதிவுக்கு இரு நாள்களே உள்ள நிலையில் நேற்று முந்தைய தினம் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மூட்டை மூட்டையாக பணம் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. காசிமேடு, கொருக்குபேட்டை ஆகிய இடங்களில் ஒரு ஓட்டுக்கு ரூ. 6000 வரை கொடுக்கப்படுவதாக ஆளும் கட்சியினர் மீது எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.
வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ரூ. 100 கோடி பட்ஜெட் போடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதேபோல் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ராவிடம் திமுகவும், பாஜகவும் புகார் தெரிவித்தன.
இதனால் கடந்த முறை போன்று இந்த முறையும் ஆர்கே நகர் இடைத்தேர்தல் 2-ஆவது முறையாக ரத்து செய்யப்படும் என்ற பேச்சு நிலவியது. இந்நிலையில் ஆர்கே நகரில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும்.
பல்வேறு புகார்கள் வந்தாலும் தேர்தலை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. பணப்பட்டுவாடாவை வேடிக்கை பார்ப்பதாக புகாருக்குள்ளான போலீஸ் அதிகாரிகளை மாற்றவும் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications