கோவை அருகே 2 பி.இ. மாணவர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கம் கொள்ளை: ஹவாலா பணமா?
கோவை: கோவை அருகே காரில் சென்ற 2 கல்லூரி மாணவர்களிடம் இருந்து ரூ. 70 லட்சத்தை 10 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பவரின் மகன் முகமது ரஷீத்(21). அதே பகுதியைச் சேர்ந்தவர் அவரது நண்பர் முகமது ரியாஸ்(20). அவர்கள் இருவரும் கோழிக்கோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் ஏரோனாட்டிக்கல் என்ஜினியரிங் படித்து வருகிறார்கள்.

ரஷீத் மற்றும் ரியாஸ் ஆகியோர் கடந்த சனிக்கிழமை சேலம் வந்து ஒருவரிடம் ரூ. 70 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு காரில் ஊருக்கு திரும்பினர். இரவு 11.45 மணிக்கு அவர்களின் கார் கோவை அருகில் உள்ள தென்னம்பாளையம் பக்கம் செல்கையில் இன்னோவா கார் ஒன்று அவர்களின் காரை வழிமறித்தது. இன்னோவா காரில் இருந்து இறங்கிய 10 பேர் மாணவர்களை காரில் இருந்து வெளியே பிடித்து இழுத்து தாக்கிவிட்டு பணத்துடன் காரை எடுத்துச் சென்றனர்.
இது குறித்து மாணவர்கள் கோவை போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அனைத்து வாகன சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே அவர்களின் கார் பல்லடம் அருகே நின்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரஷீத் போலீசில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். முதலில் தனது பர்ஸில் இருந்த ரூ. 5 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் ரூ.70 லட்சம் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார்.
அவ்வளவு பணம் உங்களிடம் எப்படி வந்தது என்று போலீசார் கேட்டதற்கு ரஷீத் கூறுகையில், கேரளாவில் என் தந்தை கல் குவாரி வைத்துள்ளார். அவர் தான் சேலத்தில் உள்ள ஒருவரிடம் ரூ. 70 லட்சத்தை வாங்கி வருமாறு கூறினார் என்றார்.
ரஷீத் பணத்துடன் வருவது தெரிந்த ஏதோ ஒரு கும்பல் தான் அதை கொள்ளையடித்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சேலம் - கோவை வழித்தடத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில்பதிவானவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications