'அதே அறையில் ஓபிஎஸ்'.. துணை முதல்வருக்கு தலைமைச் செயலகத்தில் அறை ஒதுக்கீடு
துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு, அவர் ஏற்கெனவே முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய அதே அறை இப்போதும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு நேற்று, துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பன்னீர்செல்வத்திற்கு, ஏற்கனவே அவர் முதல்வராக இருந்த போது பயன்படுத்திய அறையே இப்போதும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், நிதி அமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தார். அப்போது அவருக்கு, தலைமைச் செயலகத்தில் முதல் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராக ஓபிஎஸ் இருந்தபோதும், அதே அறையை அவர் பயன்படுத்தினார். அப்போது அவருக்கு ஜெயலலிதா பயன்படுத்திய சிஎம் சேம்பர் அறையைப் பயன்படுத்த சசிகலா தரப்பு அனுமதிக் கொடுக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது.
பின்னர், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது, ஓபிஎஸ் பயன்படுத்திய அந்த அறை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பன்னீர் செல்வத்திற்கு, மீண்டும் அதே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில், நேற்று பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.
அவருக்கு, முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் செங்கோட்டையனுக்கு அதே தளத்தில் வேறு அறையும், புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பாண்டியராஜனுக்கு மூன்றாவது தளத்தில் உள்ள அறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.