சேலத்தில் விபத்தில் சிக்கி வாலிபர் மரணம்- போலீசை தாக்கி வாகனத்தை தீ வைத்து எரித்த மக்கள்
சேலம் அருகே சின்னப்பம்பட்டியில் போலீஸ் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகனச் சோதனையின் போது தப்பியோட முயன்ற சரவணன் என்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார். சரவணனின் உயிரிழப்பை கண்ட
சேலம்: சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள இடங்கணசாலை கிராமம், கோனேரிபட்டியை சேர்ந்தவர் சரவணன், 22. விசைத்தறி நெசவுத்தொழிலாளியான இவர், நேற்று சில தினங்களுக்கு முன்னர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இளம்பிள்ளையிலிருந்து, சின்னப்பம்பட்டி செல்லும் வழியிலுள்ள கூட்டத்து புளியமரம் பகுதியில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு, சரவணன் வந்தபோது, போலீசார் கையை காட்டி பைக்கை ஓரமாக கொண்டு வந்து நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். போலீசாரை பார்த்து பயந்த சரவணன் அப்படியே திருப்பிக்கொண்டு வந்த வழியாகவே செல்ல முயன்றார். எதிர்பாராத விதமாக ஜல்லி லோடு ஏற்றி வந்த மினி டெம்போ வேன், சரவணன் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரவணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த இடத்தில் இருந்த போலீசாரை தாக்கினர். இதையறிந்து, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன், சம்பவ இடத்திற்கு சென்றார். அவரையும் பொதுமக்கள் தாக்கினர். படுகாயம் அடைந்த ஆய்வாளர் ராஜாரணவீரன், தனியார் மருத்துவமனையிலும், எஸ்.எஸ்.ஐ பழனிச்சாமி, இடைப்பாடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கி இருந்த மகுடஞ்சாவடி போலீசாரின் இரு மோட்டார் பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால், போலீசார், பொதுமக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசி, தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.
பின்னர், இறந்த சரவணன் உடலை எடுக்க விடாமல், பொதுமக்கள் தொடர்ந்து அடம் பிடிவாதமாக நின்றுகொண்டு போராட்டம் நடத்தியதால், சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், சேலம் டி.ஐ.ஜி., நாகராஜன், எஸ்.பி., இராஜன், சங்ககிரி ஆர்டிஓ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்களை அப்புறப்படுத்தி விட்டு விபத்துக்குள்ளான வாகனத்தையும், சரவணனின் உடலையும் மினி ஆட்டோவில் ஏற்ற முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களையும் சடலத்தை மினி ஆட்டோவில் ஏற்றக்கூடாது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் தான் ஏற்ற வேண்டும் என, பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீஸ் அதிவிரைவு வாகனத்தில், சரவணனின் உடலை ஏற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக சரவணனின் சொந்த ஊரில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர், பதற்றம் அதிகரித்துள்ளது.