சினிமாவில் வரும் காதலைப் பார்த்துக் கெட்டுப் போகாதீங்க.. சரத் அட்வைஸ்!
தேவகோட்டை: சினிமாவில் காட்டப்படும் காதல் ஏற்புடையது அல்ல. அதை மாணவர்கள் பார்த்து பின்பற்றக் கூடாது என்று பல படங்களில் கல்லூரி மாணவராகவும், காதலராகவும் நடித்துள்ள, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் ஆனந்த சாரல் கலைகளின் சங்கமம் விழா நடைபெற்றது. இதில் சரத்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆனந்த சாரல் விழாவில் தெறித்து விழுந்த சரத்குமாரின் பேச்சுத் துளிகளில் சில...

விழுந்தாலும் எழுந்து நிற்க வேண்டும்
மாணவர்களின் திறமைகளை கொண்டு வருவதற்காக இதுபோன்ற ஆனந்த சாரல் விழா நடைபெறுகிறது. இதன் மூலம் விடாமுயற்சி தன்னம்பிக்கை, நேர்மை ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்படும். இன்றைய கால கட்டத்தில் கீழே விழுந்தாலும் எழுந்து நிற்கக்கூடிய மன வலிமையை பெற வேண்டும்.

சம கோட்டுப் பாதையில் வெற்றி, தோல்வி
நேர்மையான சிந்தனைகளை வளர்த்து தோல்விகளையும், வெற்றிகளையும் சம கோட்டுப் பாதையில் பார்த்து பழக வேண்டும். தோற்று விட்டோம் என்பதால் மனம் உடைந்து விடக்கூடாது. தோல்வியை சந்திக்க மன தைரியத்தை அடைய பாடுபட வேண்டும்.

நானெல்லாம் ஆயிரம் முறை செத்திருக்க வேண்டும்
நான் பல முறை தோற்றுள்ளேன். அப்போதெல்லாம் எதிர்மறையாக சிந்தித்திருந்தால் ஆயிரம் முறை நான் தற்கொலை செய்திருக்க வேண்டும்.

இலக்கில் தெளிவு
கல்லூரி என்ற வசந்தமான வாழ்வில் நமது இலக்கை தெளிவாக அடைய வேண்டும். பெற்றோரின் திருப்திக்காக படிக்காமல் நமக்கென்று ஒருகுறிக்கோளை உருவாக்கிக் கொண்டு அதை முன்னிலைப்படுத்தி முன்னேற இந்த கலை விழா உதவும்.

பெற்றோர்கள் வேலைக்குப் போகும் கட்டாயம்
இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகள் வாழ்க்கையில் உயர்வதற்காக பெற்றோர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

சினிமாவைப் பார்த்து காதலிக்காதீங்க
மாதா, பிதா, குரு வரிசையில் குரு முதலிடம் பெறுகிறார். கல்லூரிகளில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க கவுன்சிலிங் மையம் அமைக்க வேண்டும். மேலும் படிக்காத மாணவர்களை கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது.
திரைப்படங்களில் வரும் கல்லூரிக்காதல் ஏற்புடையது அல்ல. அதை மாணவர்கள் பின்பற்றக்கூடாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications