சசியிடம் போட்டுக் கொடுப்பதில் திவாகரன் - தினகரன் இடையே போட்டா போட்டி!
சென்னை: டிடிவி தினகரனின் ஒவ்வொரு நகர்வையும் சசிகலாவுக்கு சொல்லி அனுப்புவதில் படுமும்முரமாக இருக்கிறாராம் திவாகரன் தரப்பு. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலாவுக்கு தொடர்ச்சியாக தகவல்களை அனுப்பி வைக்கிறாராம் தினகரன்.
அதிமுகவை சசிகலா கைப்பற்றியதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் அனைவரும் கட்சி, ஆட்சியில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தனர். ஆனால் தினகரன், வெங்கடேஷூக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்தது.
அதுவும் சசிகலா சிறைக்கு போன பின்னர் வெங்கடேஷை ஓரம் கட்டினார் தினகரன். அதேநேரத்தில் திவாகரன் தரப்பும் தொடர்ந்து கட்சி, ஆட்சியில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.
தினகரன் உத்தரவு
ஆனால் தினகரன் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். திவாகரன் சொல்வதை யாருமே கேட்கக் கூடாது என அமைச்சர்களுக்கும் கூட தினகரன் உத்தரவு போட்டிருக்கிறாராம்.
சசி படம் இல்லாமல்...
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் சசிகலா படத்தை போடாமலேயே தினகரன் பிரசாரம் செய்து வருகிறார். இது குறித்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு தகவல் அனுப்பியிருக்கிறதாம் திவாகரன் தரப்பு.
தினகரன் விளக்கம்
தம்மை தினகரன் முழுமையாக ஓரம்கட்டிவிடுவாரோ என்கிற பீதியில் இருக்கும் சசிகலாவுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம். இதை தெரிந்து கொண்ட தினகரன் தரப்பு, எல்லாம் நம்ம குடும்ப நன்மைக்குதான் என்கிற தகவலை சசிகலாவுக்கு சொல்லி அனுப்பியுள்ளதாம்.
போட்டா போட்டி
சசிகலாவிடம் போட்டுக் கொடுப்பதில் யார் முந்துவது என்கிற திவாகரன் - தினகரன் தரப்புகளின் போட்டோ போட்டியை அதிமுக மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களும் இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து எப்போதுதான் விடுதலையோ என காத்து கிடக்கின்றனராம்.