சசிகலா பொதுச்செயலாளராவதை எதிர்த்து சசிகலா புஷ்பா தொடுத்த வழக்கு.. 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
வி.கே. சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராவதை எதிர்த்து எம்பி சசிகலா புஷ்பா தொடர்ந்துள்ள வழக்கு 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். மேலும், அவர்தான் அடுத்த முதல்வர் என்ற ரீதியில் தமிழகத்தின் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் சசிகலாவை சந்தித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தெடுக்கக்கூடாது என்று கோரி ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், அதிமுக கட்சியின் சட்ட விதிகள் சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதை அனுமதிக்காது. ஆனால் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்தெடுக்க உள்ளதாக அதிமுகவின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, சசிகலாவை அதிமுகவின் பொது செயலாளராக, அக்கட்சியின் பொதுக்குழு தேர்தெடுக்க தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது. அப்போது வி.கே. சசிகலாவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள சசிகலா புஷ்பாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இரு தரப்பினரிடமும் விசாரணையை மேற்கொள்வதற்காக, வரும் 23ம் தேதி வழக்கை ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications