இதென்ன கலாட்டா? ஓபிஎஸ்-க்கு போன்போட்டு கலகக் குரலை தீவிரமாக்க அட்வைஸ் செய்தார் நடராஜன்?
தினகரன் மீதான அதிருப்தியால் மாஜி முதல்வர் ஓபிஎஸ்-க்கு போனடித்து கலகக் குரலை தீவிரப்படுத்துமாறு சசி கணவர் நடராஜன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சசிகலாவின் கணவர் நடராஜன் போனடித்து இன்னும் தீவிரமாக செயல்படுங்கள் என உசுப்பேற்றிவிட்டதாக ஒரு தகவல் தீயாக பரவுகிறது.
அதிமுகவில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி அணிதிரட்டி வருகிறார் ஓபிஎஸ். இதற்காக தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களை சந்திக்கும் பயணத்தையும் ஓபிஎஸ் தொடங்கியுள்ளார்.
சசிகலா தற்போது சிறையில் இருக்கும் சூழ்நிலையில் அவரது சகோதரி மகன் டிடிவி தினகரன் அதிமுகவையும் ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். தினகரனுடன் டாக்டர் வெங்கடேஷூம் கை கோர்த்துள்ளார்.

ஜீரணிக்க முடியாத நடராஜன்
இதுதான் சசிகலா குடும்பத்தில் பெரும் புகைச்சலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெயலலிதா புதைக்கப்பட்ட இடத்திலேயே அதிமுகவின் எதிர்காலம் பற்றி பேசிய சசிகலாவின் கணவர் நடராஜனால் இதை ஜீரணிக்க முடியவில்லையாம்.

ஓபிஎஸ்-க்கு போன்
இதேநிலையில்தான் சசிகலாவின் தம்பி திவாகரனும் இருந்து வருகிறாராம். இந்த நிலையில்தான் ஓபிஎஸ்-க்கு நடராஜனிடம் இருந்து போன் போயுள்ளது.

உசுப்பேற்றல்
இதை சற்றும் எதிர்பார்க்காத ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சியடைந்துள்ளதாம். ஓபிஎஸ்-க்கு போனடித்த நடராஜன், ஜெயலலிதா பெயரை பயன்படுத்தி நீங்கள் செய்யும் பிரசார வேகம் போதாது; தீவிரமாக செயல்படுங்கள் என உசுப்பேற்றியிருக்கிறார்.

தீபா வேண்டாம்
மேலும் தீபாவை உங்களுடன் இணைத்துக் கொள்வது உங்கள் இமேஜை பாதிக்கும்; அவருக்கு அழைப்புவிடுத்துக் கொண்டே ஒதுக்கி வைக்கும் பணியையும் செய்யுங்கள் என்றெல்லாம் அட்வைஸ் செய்திருக்கிறாராம் நடராஜன்.

சொதப்பல் இதனால்தானாம்
சசிகலா குடும்பத்தினரை எதிர்ப்பதாக கூறி மக்களை நம்ப வைக்கும் ஓபிஎஸ், நடராஜனின் இந்த போன் அட்வைஸையும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் 'வரலாற்று திருப்பம்' ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்ட நேற்றைய பிரஸ் மீட்டில் படுசொதப்பலை வெளிப்படுத்தினாராம் ஓபிஎஸ் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications