சசிகலா பொதுச்செயலாளராவதை எதிர்த்து சசிகலா புஷ்பா தொடுத்த வழக்கு.. தீர்ப்பு ஒத்திவைப்பு
வி.கே. சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராவதை எதிர்த்து எம்பி சசிகலா புஷ்பா தொடுத்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா தொடர்ந்துள்ள வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி அதிமுகவில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க அக்கட்சியின் மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் அழைப்புவிடுத்தனர்.
இதனையடுத்து, சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தெடுக்கக்கூடாது என்று ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா போர்க் கொடி தூக்கியுள்ளார். மேலும், இதுதொடர்பான வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியின் சட்ட விதிகள் சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதை அனுமதிக்காது என்றும் எனவே, சசிகலாவை அதிமுகவின் பொது செயலாளராக, அக்கட்சியின் பொதுக்குழு தேர்ந்தெடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதிமுக தரப்பு மற்றும் சசிகலா புஷ்பா தரப்பில் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அதன் தீர்ப்பை நீதிபதி கல்யாணசுந்தரம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.