எனது கணவர் உடலை எங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும்: சேலம் கலெக்டருக்கு சசிபெருமாள் மனைவி மனு
சேலம்: கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள எனது கணவர் உடலை எங்களை தவிர அரசு அதிகாரிகள் உட்பட வேறு யாரிடமும் ஒப்படைக்க கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் காந்தியவாதி சசி பெருமாளின் மனைவி மனு கொடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம், இ.மேட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள், கடந்த வெள்ளிக்கிழமை உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது உயிரிழந்தார். இவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சசிபெருமாளின் மனைவி மகிழம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு சென்றார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆட்சியர் அலுவலகம் பூட்டிப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என்று அலுவலக வாயிலில் தனது மகன் விவேக் உடன் மகிழம் அமர்ந்தார். அவருடன் அகில இந்திய மகிளா காங்கிரசை சேர்ந்த கரூர் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரும் உடன் இருந்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சசிபெருமாள் மனைவி மகிழம் கொடுக்க உள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
ஆட்சி தலைவர் அவர்களுக்கு வணக்கம்.
எனது கணவர் காந்தியவாதி - மதுவிலக்கை அமல்படுத்த வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சசிபெருமாள் என்ன நடந்தது என்ன உண்மை தெரியாத விதத்தில் அவர் காலமாகி விட்டார் என்ற திடீர் தகவலால் அதிர்ச்சி நீங்கா கவலையோடு உள்ளேன். எந்தக் கொள்கைக்காக என் கணவர் போராடினாரோ அந்த கொள்கைக்காக மறைந்த அவரது உடலை குடும்பத்தினர் வாங்க மறுத்து வேதனையில் உள்ளேன். இச்சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் உள்ள எனது கணவர் சசிபெருமாள் உடலை எங்களை தவிர அரசு அதிகாரிகள் உட்பட வேறு யாரிடம் உடலை ஒப்படைக்க கூடாது. எங்கள் மனநிலையை அரசு உணர வேண்டும். அரசு மருத்துவமனையில் இருந்து எனது கணவர் சசிபெருமாள் உடல் வேறு எங்கும் மாற்றப்படக் கூடாது என்று கூறியுள்ளார்.