உடுமலை அருகே பலாத்காரம் செய்து பள்ளி மாணவி கொலை!
திருப்பூர்: உடுமலை அருகே பிளஸ் 2 மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பக்கத்து வீட்டு வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. இவரது மகள் புஷ்பலட்சுமி, உடுமலை, பெதப்பம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அருண்குமார் (28). பொள்ளாச்சியில் தன்னார்வ நிறுவனம் ஒன்றில் களப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
அருண்குமார், அடிக்கடி புஷ்பலட்சுமி வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு தங்கவேல், அவரது மனைவி ராசாத்தி ஆகியோர் வெளியே சென்றிருந்தபோது அருண்குமார் அங்கு வந்துள்ளார். வீட்டில் புஷ்பலட்சுமி, அவரது தாத்தா, பாட்டி மட்டும் இருந்துள்ளனர்.
தாத்தா, பாட்டி வெளியே அமர்ந்திருக்க வீட்டுக்குள் சென்ற அருண்குமார், கதவை உள்புறமாக பூட்டிவிட்டு, புஷ்பலதாவை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்து சத்தம் வந்ததால் அங்கிருந்தவர்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளனர். உள்ளே இருந்து அருண்குமார், பதற்றத்துடன் வெளியே வந்திருக்கிறார். வீட்டிற்குள் புஷ்பலட்சுமி அரை நிர்வாண கோலத்தில் மயங்கி கிடந்தார்.
இதையடுத்து, புஷ்பலதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த உறவினர்கள், அருண்குமாரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் புஷ்பலதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பலாத்காரம், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவனை கைது செய்தனர்.
12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications