ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு கொடும் அநீதி.. எதிர்க்கட்சிகளுக்கு அறைகூவல் விடுத்த சீமான்!
சென்னை : ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்து இன்று மக்களவை செயலகம் அறிவித்ததற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதம் என சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு, பாஜகவின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார் சீமான்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம்
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோடி பெயர் குறித்துப் பேசியதாக காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சூரத் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் இன்று அறிவித்துள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

சீமான் கடும் எதிர்ப்பு
அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், "தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசியதற்தாக காங்கிரஸ் கட்சியின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்திருக்கும் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தவகையிலும் ஏற்புடையதல்ல! இந்திய அரசியலமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை எனும் அடிப்படை உரிமையையே முற்றாகப் பறிக்கும் வகையில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பை முழுமையாக எதிர்க்கிறேன்.

அடாவடித்தனம்
இத்தோடு, அவரது மக்களவை உறுப்பினர் பதவியும் முழுமையாகப் பறிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதமாகும்; வெளிப்படையாக நிகழ்ந்தேறும் கொடும் அநீதியாகும். நாட்டை ஆளும் பாஜக அரசு தனது அதிகார பலத்தைக் கொண்டு, அத்துமீறலும், அடாவடித்தனமும் செய்து, தன்னாட்சி அமைப்புகளை முறைகேடாகக் கையகப்படுத்தி, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் சதிச்செயலைத் தொடர்ச்சியாக அரங்கேற்றுவது ஏற்கவே முடியாத பெரும் கொடுங்கோன்மையாகும். மக்களாட்சிக் கோட்பாட்டுக்கெதிரான பாஜக அரசின் இந்தப் படுபாதகச் செயல்கள் நாட்டுக்குப் பெருங்கேட்டை விளைவிக்கும் தீங்காகும்.

முகத்திரையைக் கிழித்தெறிவோம்
மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்களவை உறுப்பினரை, இது போன்ற வழுவற்ற வழக்குகள் புனைந்து தகுதி நீக்கம் செய்வது என்பது குடியரசு அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் கொடுஞ்செயலாகும். இந்திய அரசியலமைப்பின் பிரதான தத்துவமான அதிகாரப்பகிர்தல் (Separation of Powers) என்கிற உயர்ந்த நடைமுறைக்கு எதிரான நடவடிக்கைகள் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் என்றால் மிகையாகாது. அதிகார வர்க்கத்தின் இத்தகைய கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக ஆற்றல்கள் ஒன்று திரண்டு, பாசிச பாஜகவின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications