காங். முன்னாள் எம்.எல்.ஏ. நிலக்கோட்டை ஏ.எஸ். பொன்னம்மாள் காலமானார்!
மதுரை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மூத்த அரசியல் தலைவருமான நிலக்கோட்டை ஏ.எஸ். பொன்னம்மாள் (வயது 88) மதுரையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
திண்டுக்கல் மாவட்டம் அழகம்பட்டியைச் சேர்ந்தவர் ஏ.எஸ். பொன்னம்மாள். தன்னுடைய இளம்பிராயத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டவர். 1957, 1962ஆம் ஆண்டுகளில் சோழவந்தான் சட்டசபை தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 1980ஆம் ஆண்டு நிலக்கோட்டை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டும் வென்றார் பொன்னம்மாள். இதனைத் தொடர்ந்து 1989, 91 ஆம் ஆண்டுகளில் நிலக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகவும் 1996ஆம் ஆண்டு மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராகவும் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் பொன்னம்மாள்.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் என்பதால் அனைவரும் அன்புடன் 'பொன்னம்மாள் அக்கா' என்றே அழைப்பர். கடந்த சில ஆண்டுகளாக முதுமையால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், வத்தலகுண்டு தனியார் மருத்துவமனையில் முதலில் சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மிக மூத்த அரசியல் தலைவராக இருந்தபோதும் மிகவும் எளிமையான மனிதராகவே வாழ்ந்தவர் பொன்னம்மாள். பொன்னம்மாள் தமிழக அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவர் வத்தலகுண்டு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தி.மு.கவின் துணைப் பொதுச்செயலர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி தொடர்ந்து அவரை பார்வையிட்டு உடல்நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து அவரைப் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் இடம்பெற்றன.
பின்னர் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் மதுரை மருத்துவமனையில் பொன்னம்மாளை பார்த்து உடல்நலம் விசாரித்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொடர்ந்து அவரது நலம் விசாரித்து வந்தனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தொலைபேசியில் பொன்னம்மாளின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பொன்னம்மாள் உயிர் சிகிச்சை பலனின்றி இன்று பகல் பிரிந்தது. அவரது உடல் திண்டுக்கல் அழகம்பட்டியில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
தலைமுறைகள் தாண்டியும் நீங்கா இடம்பிடித்தவர் 'பொன்னம்மா அக்கா'... போய் வாருங்கள்!!