போயஸ் ராணி ஆட்சியில போட்டோவுக்கு குறைச்சல் இல்ல... புழல் சிறைவாசலை அதிரவைத்த கோவனின் அடுத்த பாட்டு
சென்னை: மதுவிலக்கை வலியுறுத்தும் பாடலை பாடியதற்காக கைது செய்யப்பட்ட ம.க.இ.க.வின் கோவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சென்னை புழல் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த கோவன் அங்கேயே மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பான பாடலை பாடி தமிழக அரசை சாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் (ம.க.இ.க) கலைக் குழுவைச் சேர்ந்த கோவன், 'மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடலில் முதல்வர் ஜெயலலிதவை இரட்டை அர்த்தத்தில் கோவன் விமர்சிப்பதாக கூறி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசதுரோக வழக்கும் போடப்பட்டது.
ஆனால் நீதிமன்றமோ கோவன் மீதான தேச துரோக குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்தது. கோவனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதிக்கவில்லை. பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
கோவனை வரவேற்க கூடியிருந்த ம.க.இ.க. கலைக் குழுவினர் தொடர்ந்து பல்வேறு பாடல்களை பாடி வந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த கோவனும் இக்குழுவினருடன் இணைந்து கொண்டு மழை வெள்ளம் தொடர்பான பாடலை பாடினார்.
அந்த பாடல்:
ஊரெங்கும் மழைவெள்ளம்
தத்தளிக்கிறது தமிழகம்
இது யாரோட குத்தம்னு
கேட்காத சிறைவாசம்!
சாக்கடை ஊட்டுக்குள்ளே
போக்கிடம் ஏதுமில்லே...
பாக்க வந்த அம்மாவோட
காரு கூட நனையவில்லை..
பொங்கித் தின்ன வழியில்லை
பொட்டலம்தான் கதியில்லை
போயஸ் ராணி ஆட்சியில
போட்டோவுக்கு குறைச்சல் இல்ல...
தீபாவளி சரக்கு ஓட்ட திட்டம் 400 கோடி
தியேட்டரை வளைச்சு போட திட்டம் 1000 கோடி
தண்ணியில மிதந்து மிதந்து தமிழகமே டெட்பாடி
தடுக்க என்ன திட்டம்னு கேட்காதே தடியடி
என பாடி அங்கிருந்த அனைவரையும் அதிர வைத்தார்.