கதிகலங்க வைத்த கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம்! வாட்ஸ்ஆப்பில் குழு..ஒன்றிணைத்த விசிக மாசெ? பரபர விசாரணை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு பள்ளி மாணவி மரணம் அடைந்ததும், அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் திராவிட மணியிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி ஜீலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரை நியமித்து அப்போதைய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வீடியோ ஆதாரங்களை கொண்டும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் ஏராளமானோரை கைது செய்தனர்.
இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மாணவி மரணம் குறித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு விதமான சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் வாட்ஸ் அப் குழுக்களை அமைத்து அதில் உறுப்பினர்களை சேர்த்து கலவரத்தை தூண்டும் வகையில் தகவல் மற்றும் கருத்துக்களை பதிவிட்ட நபர்கள், யூட்யூபர்கள், யூட்யூப் சேனல்கள் ஆகியவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கனியமூர் சக்தி பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் மனு செய்து ஜாமீன் பெற்று வெளியில் வந்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து 1152 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையானது நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் மாணவி ஸ்ரீமதியின் தற்கொலைக்கான காரணம் எதுவும் இல்லை எனவும் தற்கொலைக்கான முகாந்திரம் மட்டும் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், மேலும் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் செயலாளர் சாந்தி மற்றும் ஆசிரியர்களின் தலையீடு இல்லை என சாட்சிகள் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஐந்து பேரும் மாணவியின் இறப்புக்கு காரணம் கிடையாது என சிபிசிஐடி தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமைகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பள்ளி கலவரம் தொடர்பாக வாட்ஸ்அப் குழுஅமைத்து, கலவரக்காரர்களை ஒருங்கிணைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திராவிட மணி மற்றும் மாணவியின் தாயார் ஆகியோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு, திராவிட மணிக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், திராவிடமணி தனது வழக்கறிஞர்களுடன் கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அருகே உள்ள கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவர விசாரணை சிறப்புப் புலானாய்வுக் குழு அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுதொடர்பாக அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதே நேரத்தில் மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications