நெடுவாசல் போராட்டம் கைவிடப்படுமா? இன்று இறுதி முடிவு... போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேட்டி
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்வதா? இல்லையா என்பது குறித்து இன்று இறுதி முடிவு செய்யப்படும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலு தெரிவித்தார்.
புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நீடிக்கும் என்று சில இளைஞர்கள் தெரிவித்து நிலையில், போராட்டத்தை தொடர்வதா? இல்லையா என்பது குறித்து இன்று இறுதி முடிவு செய்யப்படும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலு தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை உள்ளிட்ட பல இடங்களிலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது, மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று கடைகளை அடைத்து வர்த்தக சங்கத்தினர் ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து 15வது நாளாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சென்னை வந்து போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தை கைவிடுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை முதல் போராட்டத்தை தொடர்வதா, இல்லை விடுவதா என்று ஆலோசனை நடத்தி வந்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் கணேஷ், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கிராம மக்களுடன் பேரவூரணியில் ஆலோசனை நடத்தினர்.
இந்ந நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோட்டைக்காட்டில் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதே போல் நெடுவாசலிலும் போராட்டம் தொடரும் என்று இளைஞர்கள் திடீரென்று அறிவித்தனர். பேராவூரணியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இளைஞர்கள் திடீர் என்று அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நெடுவாசல் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலு பேராவூரணியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை இன்று காலை சந்தித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்க உள்ளோம்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைத்தால் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து இறுதி முடிவு செய்யப்படும். போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் போராட்டத்தைக் கைவிடுவதா, தற்காலிகமாக ஒத்திவைப்பதா? அல்லது தொடருவதா என்று கிராம மக்கள் அறிவிப்பதே இறுதியான அறிவிப்பு என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications