ஜெயலலிதா உடல் நலம் பெற ஸ்ரீவைகுண்டத்தில் விஷ்ணுசகஸ்ர நாம யாகம்
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்சுவாமி கோவிலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி விஷ்ணுசகஸ்ரநாம புஷ்ப யாகம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடந்தது.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நவதிருப்பதியின் அனைத்துக் கோவில்களிலும் ஒரே நேரத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நவதிருப்பதிகளில் முதல் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்சுவாமி கோவிலில் கள்ளபிரான் சுவாமி வைகுண்டநாயகி, சோரநாதநாயகி தாயார்களுடன் எழுந்தருள அங்கு ரோஜா, செவ்வரளி, மல்லிகை, தாமரை, பிச்சி, துளசி, வாடாமல்லி உள்ளிட்ட பலவகையான மலர்கள் கொண்டு 1008 நாமாவளியுடன் கூடிய விஷ்ணுசகஸ்ர நாம அர்ச்சனை மற்றும் புஷ்பயாகம் நடைபெற்றது. சிறப்பு யாக வழிபாடுகளை வாசுபட்டர், ரமேஷ்பட்டர், ராமானுஜம், சீனிவாசன் குழுவினர் செய்தனர். இந்த யாக வழிபாட்டில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், மகளிரணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக, ஸ்ரீவைகுண்டம் பாலவிநாயகர் கோவில் முன்பிருந்து அதிமுகவினர், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பால்குடம் எடுத்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் விடுதலை பெறவேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்சுவாமி கோவிலில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தலைமையில் இதுபோன்றதொரு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதற்கு மறுநாளே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை ஆனார். இதுபோன்று, இந்த முறையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்றிடுவார் என்று கருதி இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications