வட மாகாணத்தில் 13வது அரசியல் சாசன திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்: ராஜ்நாத்சிங்
திருச்சியில் நடைபெற்ற பாஜகவின் இளந்தாமரை மாநாட்டில் ராஜ்நாத் தமது உரையை பெரியோர்களே! தாய்மார்களே!! என தமிழில் கூறி பேசத் தொடங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
இங்கே மோடி சூறாவளியால் மிக பிரம்மாண்ட கூட்டம் கூடியுள்ளது. நான் தமிழ் மொழியை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் என்னால் ஹிந்தியில்தான் பேச இயலும்.
இளைஞர்கள் நிச்சயமாக கனவு காண வேண்டும். ஸ்ரீராமன் வழியில் ஆதிசங்கரர், விவேகானந்தரும் மாற்றத்தைக் கொண்டு வந்ததைப் போல பாரத இளைஞர்கள் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வருவார்கள்
இளைஞர்கள் எண்ணிக்கை 24 கோடி அதிகரிக்கப் போகிறது. ஏனைய கட்சிகளுக்கு நீங்கள் வாக்காளர்களாக தெரியலாம். ஆனால் பாரதிய ஜனதா கட்சிக்கு நீங்கள் சொத்து. உங்கள் மூலம் பாரத நாட்டை வல்லரசாக்குவோம்.
18 வயது இளைஞர்கள் அனைவரும் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நாம் விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பணவீக்க விகிதத்தை உயர்த்தவிடவில்லை. எந்த ஒரு அமைச்சரும் ஊழலில் சிக்கவில்லை. ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது?
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இளைஞர்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்தினோம். அந்தக் காலத்தில் 70 லட்சம் தொழில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சியில் வெறும் 27 லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் பிரதமர் எதில் கையை வைத்தாலும் நமக்கு கிடையாது. வெங்காயத்தில் கையை வைத்தால் வெங்காயம் கிடைக்கவில்லை. நிலக்கரியில் கையை வைத்தால் கோப்புகள் காணாமல் போகிவிடுகிறது. அதனால் முதுகுவலியுடன் செல்லும் ஒரு பெண்மணி தமது முதுகுவலி காணாமல் போக முதுகில் கையை வையுங்கள் என்று மன்மோகன்சிங்கிடம் சொல்வார். அப்படி இருக்கிறது நிலைமை.
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துகள். உங்களுக்கும் பாராட்டுகள்.
இலங்கை அரசாங்கமானது ஜெயவர்த்தனே அரசு ஒப்புக் கொண்ட அதிகாரப் பகிர்வுக்கான 13வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நம் தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி நரேந்திர மோடி பேசுவார். நரேந்திர மோடி பக்கத்தில் அமருகிறவர்களுக்கெல்லாம் சிபிஐ வைத்து விசாரிக்கிற இந்த காங்கிரஸ் அரசை எச்சரிக்கிறோம்.