தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் ஒத்திவைப்பு:பிரசாரத்தை ரத்து செய்தார் ஸ்டாலின் !
சென்னை: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையிலும், சிக்கிய ஆதாரங்களை கொண்டும் இந்தத் தொகுதிகளுக்கான தேர்தலை மே 23-ஆம் தேதிக்குத் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. எனவே, இந்தத் தொகுதிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட வேட்பாளர்களின் பிரசாரம் தொடர்ந்தது.

இந்நிலையில் திமுக வேட்பாளர் அஞ்சுகம்பூபதியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ஸ்டாலின் நேற்று தஞ்சாவூர் வந்திருந்தார். மாலையில் பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு இரு திமுக நிர்வாகிகள் வீட்டுக்குச் சென்றார். அப்போது, தேர்தல் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட விவரம் தெரியவந்தது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.
அதேபோல் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக செய்வதற்காக நடிகர்கள் ஆனந்தராஜ், ராமராஜன், சிங்கமுத்து ஆகியோர் தஞ்சாவூருக்கு நேற்று வந்தனர். தேர்தல் தேதி ஒத்திவைப்பு தெரியவந்ததையடுத்து, அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக, திமுக வேட்பாளர்களும் தங்களது பிரசாரங்களை ரத்து செய்தனர்.












Click it and Unblock the Notifications