ரயில்வே பட்ஜெட்: தமிழக மக்களுக்கு பெறுத்த ஏமாற்றம் - ஸ்டாலின்
சென்னை: மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2016-17 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது:
ரயில்வே பட்ஜெட்டில் மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்று திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் வரவேற்புக்குரியது என்றாலும், 1.21 லட்சம் கோடி ரூபாய் மூலதனத் திட்டங்களில் தமிழகத்திற்கு என்று அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்குக் கூட நிதி ஒதுக்காமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியது.

பிப்ரவரி முதல் வாரத்திலேயே தலைவர் கலைஞர் அவர்கள், "தமிழகத்தில் 1996-97 மற்றும் 1998-99 ஆகிய நிதி நிலை அறிக்கைகளில் அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை செயல்படுத்த வேண்டும்" என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனாலும் அக்கோரிக்கை பற்றியோ, தமிழகத்திற்கு தேவையான புதிய ரயில்வே திட்டங்கள் குறித்தோ எந்த அறிவிப்பும் ரயில் நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்படவில்லை. தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தலைவர் கலைஞரின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
வேளாங்கன்னி, நாகபட்டினம் உள்ளிட்ட ரயில்வே நிலையங்களை அழகு படுத்தும் பணி எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் சென்னை மாநகரில் உள்ள போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சென்னை கடற்கரை- கொருக்குப்பேட்டை 3- வது திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே திட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது தமிழக மக்களின் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்ற போக்கை எடுத்துரைக்கிறது.
சென்னையில் "ஆட்டோ ஹப்" ஆரம்பிக்கப்படும் என்றும், சென்னை- டெல்லி சரக்கு ரயில் என்றும் அறிவித்துள்ளதை வரவேற்கும் அதே நேரத்தில் டெல்லி, மும்பை, கல்கத்தா போன்ற புறநகர் ரயில் திட்டங்களுக்கு செலுத்தப்பட்டுள்ள கவனம் சென்னை புறநகர் ரயில் திட்டத்திற்கு செலுத்தப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
37 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள அதிமுக அரசு, தமிழகத்திற்கு தேவையான ரயில்வே திட்டங்களை கேட்டுப் பெற தொடர்ந்து இரண்டாவது வருடமாக தவறி விட்டது. தமிழக மக்கள் நலனிலும், தமிழகத்தில் உட்கட்டமைப்பை பெருக்க வேண்டும் என்ற சிந்தனையும் இல்லாத அரசாக அதிமுக அரசு இருப்பதால்தான் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்குரிய ரயில்வே திட்டங்களை பெற முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளது என்று குற்றம் சாட்ட விரும்புகிறேன். மொத்தத்தில் இந்த ரயில்வே நிதி நிலை அறிக்கை மூலம் மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சித்து விட்டது.
என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications