வெளியூரில் இருந்து வந்து தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிடுகின்றனர்.. மதுரை சரக டிஐஜி விளக்கம்
வெளியூரில் இருந்து வந்து சில நபர்கள் தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிடுவதாக மதுரை சரக டிஐஜி பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி: வெளியூரில் இருந்து வந்து சில நபர்கள் தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிடுவதாக மதுரை சரக டிஐஜி பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்று வன்முறை வெடித்தது. இதில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் போராட்டம் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தூத்துக்குடியில் வரும் 25-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த பகுதிகள் மற்றும் வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்களம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம், எப்போதும் வென்றான் ஊர்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊர்வலங்களுக்கு தடை
அதன்படி ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், மிதிவண்டி, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மூலம் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிமாவட்ட மக்கள்
மேலும் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள பொதுமக்களை அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றும் துப்பாக்கிச்சூடு
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் இன்று தடியடி, துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகைக்குண்டு உள்ளிட்டவற்றை பிரயோகம் செய்துள்ளனர்.
கண்டனம்
இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 11 பேரை பலி வாங்கிய நிலையயில் இன்றும் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கண்டனம் எழுந்துள்ளது.
வெளியூர் நபர்கள்
இந்நிலையில் தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியின் போது மதுரை சரக டிஐஜி பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வெளியூரில் இருந்து சில நபர்கள் வந்து தூத்துக்குடியில் வன்முறையை தூண்டிவிடுகின்றனர் என அவர் குற்றம்சாட்டினார்.
சந்தேக நபர்கள்
வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சந்தேகப்படும் படியான வெளியூர் நபர்கள் யாரேனும் தூத்துக்குடிக்கு வந்தால் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மதுரை சரக டிஐஜி பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
தொடரும் பதற்றம்
தூத்துக்குடியில் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட வெளிமாவட்ட எஸ்பிக்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.