வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம்! வெறிச்சோடிய சாலைகள்
நெல்லை: வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மேலப்பாளையத்தில் 1,500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆட்டோ, கார், வேன் ஆகியவையும் இயங்கவில்லை.
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இன்று வக்பு திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கடையடைப்பு நடக்கிறது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியதையடுத்து சட்டமானது. வக்ப் சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினமும் நேற்றும் நடைபெற்றது.
வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வக்ஃப் புதிய சட்டப்படி எந்த உறுப்பினர் நியமனமும் கூடாது. ஏற்கெனவே வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துகளின் நிலம் வகைப்படுத்துதலும் கூடாது. உறுப்பினர் நியமனம் அனைத்திலும் தற்போதைய நிலை தொடர வேண்டும். மத்திய அரசு, மாநில அரசுகள், வக்ஃப் வாரியம் 7 நாட்களில் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து ஜமாத், அனைத்து அரசியல் கட்சி சார்பில் நடக்கும் போராட்டத்தையொட்டி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 1,500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆட்டோ, கார், வேன் ஆகியவை இயங்கவில்லை.
நெல்லை மேலப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகமான முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அனைத்து முஸ்லிம் அமைப்புகள் ஜமாத்துகள் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை முதல் மேலப்பாளையத்தில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் ஓடவில்லை. இதனால் அப்பகுதியில் சாலைகள் வெறிச்சோடி உள்ளன. இன்று மாலையில் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications