நெல்லை-பதற்றமான வாக்கு சாவடிகளை கண்காணிக்க பொறியியல் கல்லூரி மாணவர்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பதற்றமான வாக்கு சாவடிகளில் பணியாற்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு தினத்தன்று காலையில் லேப்டாப்புடன் ஆஜாராக வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம் , நாங்குநேரி, ராதாபுரம், சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தென்காசி தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியும் அடங்கும்.
இந்த 10 சட்டமன்ற தொகுதியிலும் கள்ள ஓட்டு புகார், 90 சதவீதத்திற்கும் அதிக வாக்கு பதிவு, பிரச்சனை உருவாகும் இடங்கள், மத, சாதி ரீதியாக பிரச்சனை ஏற்படும் இடங்கள் என்ற அடிப்படையில் பதற்றமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
வீடியோ பதிவு
இந்த இரண்டு தொகுதிகளிலும் 604 வாக்கு சாவடிகள் பதற்றமானவே என தெரிய வந்துள்ளது. பதற்றமான வாக்கு சாவடிகளில் முழுவதும் வீடியோ முலம் பதிவு செய்யப்படுகிறது. அதற்காக அனைத்து வாக்கு சாவடிகளிலும் லேப்டாப், வெப் கேமரா பொருத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
605 மாணவர்கள்
மேலும் இந்த வாக்கு சாவடிகளில் பணியாற்ற நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 605 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தேர்தல் நாளான்று அவர்களுக்கு ஓதுக்கப்பட்ட அந்தந்த தேர்தல் வாக்கு சாவடிகளில் காலை முதலே லேப்டாப் கொண்டு ஆஜாராக வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பதட்டமான வாக்கு சாவடிகளில் துணை ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 1920 மாணவர்கள்
சென்னையில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட மொத்தம் 1920 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1280 மாணவர்கள் லேப்டாப்களில் உள்ள வெப் கேமராக்கள் மூலம் கண்காணிப்பார்கள். இதனை அதிகாரிகள் இருந்த இடத்தில் இருந்தே கண்காணிக்கலாம். மீதமுள்ள மாணவர்கள், வாக்குச்சாவடிகளில் நிகழும் சம்பவங்களை கேமரா மூலம் பதிவு செய்வார்கள்.
இணையதள வசதி
மாணவர்களுக்குத் தேவையான இணையதள வசதி ஏற்படுத்தித் தரப்படும். அதிக கண்காணிப்பு தேவைப்படும் சாவடிகளில் இந்த மாணவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுதொடர்பாக மாணவர்களுக்கு ஓரிரு நாள்களில் பயிற்சி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications