இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரனுக்கு ஆதரவாக சு.சுவாமி படுதீவிர லாபி
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரனுக்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி லாபி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்புக்கு கிடைக்கக் கூடாது என்பதிலும் தினகரன் தரப்புக்கு கிடைக்க வேண்டும் எனவும் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தீவிர லாபியில் இறங்கியிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ், தினகரன் தரப்பு கோரியது. இதனால் இரட்டை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதன் பின்னர் அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் என மூன்று அணிகளானது. இந்த அணிகள் சார்பாக லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
தேர்தல் ஆணையத்தில் மனு
இந்நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. இதையடுத்து தாங்கள் இரு அணிகளும் இணைந்துவிட்டதால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது.
நீதிமன்றங்களில் தினகரன் அணி
அதேநேரத்தில் தினகரன் அணியோ தங்களுக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரியது. அத்துடன் இதற்காக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசமும் கோரியது. இது தொடர்பாக நீதிமன்றங்களிலும் தினகரன் தரப்பு வழக்கு போட்டுப் பார்த்தது.
தேர்தல் ஆணையத்தில் விசாரணை
ஆனால் தினகரன் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் கடந்த 13-ந் தேதி இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது.
முடங்கும் இரட்டை இலை?
இதனிடையே இரட்டை இலை சின்னம் எடப்பாடியார் தரப்புக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி படுதீவிரமான லாபியில் இறங்கியுள்ளாராம். இரட்டை இலை சின்னத்தைப் பொறுத்தவரையில் தினகரன் தரப்புக்குதான் கிடைக்க வேண்டும் இல்லையெனில் முடக்கி வைக்க வேண்டும் என்பதுதான் சு.சுவாமியின் லாபி என கூறப்படுகிறது.