காவல்துறைக்கே பாதுகாப்பு தேடும் நிலையில் தமிழகம்! தமிழ் மாநில காங்கிரஸ் சாடல்!
கள்ளக்குறிச்சி: காவல்துறைக்கே பாதுகாப்பு தேடும் நிலையில் தமிழகம் உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
கள்ளக்குறிச்சி போராட்டம் தொடர்பாக முன் கூட்டியே உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தும் காவல்துறையினர் மெத்தனமாக இருந்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு அருகாமை மாவட்ட அமைச்சரான பொன்முடி அங்கே சென்று மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்காதது ஏன் என வினவப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் யுவராஜ் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி விடுதியின் 3-வது மாடியில் இருந்து 12.07.2022 அன்று இரவு குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாணவி இறப்பு
மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு அந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து தடை
இதனால் சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. ஒரு கட்டத்தில் நுழைவு வாயிலை உடைத்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பலர் பள்ளிப் பொருட்களை எடுத்து சென்றனர். கல்வீச்சு தாக்குதலில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. செல்வகுமார், டிஐஜி பாண்டியன் உள்பட போலீசார் பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

திமுக அரசு
ஆளுகின்ற திமுக அரசின் மீது மக்கள் மொத்தமாக நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஏற்கனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ள நிலையில் காவல்துறைக்கே பாதுகாப்பு தேடும் நிலையில் அரசு உள்ளதா? நேற்று இரவில் இருந்தே போராட்டம் தொடங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதாக உளவுத்துறைக்கு தகவல் தெரிந்தும் காவல்துறை மெத்தனமாக இருந்து விட்டனர். கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி அவர்கள் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஐந்து நாட்கள்
மாணவி இறந்து கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஆகியும் அந்த துறையைச் சேர்ந்த தலைமை கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இதுவரை அந்த குடும்பத்தில் சென்று சந்தித்து ஒரு ஆறுதல் கூட கூறவில்லை? அந்தப் பகுதியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் அங்கு சென்று அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி இருக்கலாம்.

தமிழ் மாநில காங்கிரஸ்
ஆனால் அதையும் செய்ய தவறிவிட்டனர். மொத்தத்தில் தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சி ஆட்சிதானா? என்று கேள்விக்குறியாக உள்ளது. தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இச் சம்பவம் குறித்து காவல்துறை அனைவரது சந்தேகங்களையும் போக்கும் வகையில் நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications