தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஆரம்பித்து தற்போது கர்நாடகா மற்றும் கேரளாவில் தீவிரமடையத் துவங்கியுள்ளது. தமிழகத்திலும் வேலூர், கோவை போன்ற இடங்களில் பலத்த மழை கொட்டியுள்ளது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் சில இடங்களில் இன்றும் மழை பொழிய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த வானிலை நாளை வரை நீடிக்கும் என்று கருதப்படுகிறது " என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று பெய்த மழை அளவின்படி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 12 செ.மீ., வால்பாறையில் 7 செ.மீ, சேலத்தில் 4 செ.மீ, சேலம் மாவட்டம் ஏற்காடு, வாழப்பாடி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ, நீலகிரி மாவட்டம் தேவலா, காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், சென்னை மாவட்டம் டி.ஜி.பி. அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
வேலூரில் கடந்த சில 15 நாட்களுக்கு முன்பு வெப்பச்சலனம் காரணமாக ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்தது. கடந்த 9 ஆம் தேதி காலையும் மழை பெய்தது.
அதற்கு பின்பாக நேற்றுதான் மறுபடியும் மாலை 6 மணி அளவில் வேலூரில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications