தமிழகத்தில் விரைவில் உறுதியாக தேர்தல் நடைபெறும்.. ஸ்டாலின் திடீர் பேச்சு!
ஈரோட்டில் நதிகள் இணைப்பு மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின் தமிழத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.
ஈரோடு: தமிழகத்தில் விரைவில் உறுதியாக தேர்தல் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோட்டில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நதிகள் இணைப்புக்கு ஆதரவு பெருகினாலும் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. பாண்டியாறு - புன்னம்புழா உள்ளிட்ட பல்வேறு நதிகள் இணைப்பு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. குறைகளை மறைக்கவே மத்திய அரசு புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மிரட்டலுக்காக மட்டுமே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெட்கக்கேடான ஆட்சி நடைபெறுகிறது. ஒரு வாக்குப்பதிவில் 3 முதல்வர்கள் ஆட்சி நடத்தியது தமிழகத்தில் தான். தினசரி புதிய புதிய அணிகள் உருவாகிக்கொண்டே உள்ளன.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதிமுகவில் பலர் சிறை செல்வார்கள். அணி அணியாய் செயல்படுபவர்கள் ஆட்சியை கவிழ்க்க முன்வரமாட்டார்களா? என்று கூறினார். மேலும் தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடப்பது உறுதி என்றார் ஸ்டாலின்.