தமிழிசை பொய் சொல்கிறார்... அவர் கட்சிக்கும் பதவிக்கும் இது அழகல்ல.. செல்லூர் ராஜு ஆவேசம்
ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கவில்லை என தமிழிசை சவுந்தர்ராஜன் பொய் சொல்கிறார் என அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை: ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கவில்லை என தமிழிசை சவுந்தர்ராஜன் பொய் சொல்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். இது அவர் வகிக்கும் பதவிக்கும் கட்சிக்கும் அழகல்ல என்றும் அவர் பாய்ந்து பிராண்டியுள்ளார்.
மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சிநிதியை வழங்குவதற்காக மதுரை கலெக்டர் அலுவலகத்திற்க்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், எம்எல்ஏக்கள் இராஜன் செல்லப்பா, உள்ளிட்டோர் வந்திருந்தனர். வறட்சி நிதியை வழங்கிவிட்டு வெளியே வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவை சூழ்ந்த செய்தியாளர்கள் அவரிடம் ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு, சீனி, பாமாயில், ஆகிய பொருட்கள் கிடைப்பதில்லை பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளாரே என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு அவர் நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை. ஆய்வு செய்யாமலே தமிழிசை பொய் கூறுகிறார் என்றார்.
இது அவர் இருக்கும் கட்சிக்கும் பதவிக்கும் அழகல்ல என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசாமாக கூறினார். ரேஷன் கடைகளில் பருப்பு உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்படாததைக் கண்டித்து பாஜக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.