என்னது 177.25 டிஎம்சியையும் உடனே திறக்கனுமா? தீர்ப்பை புரிந்து கொள்ளாமல் போஸ்ட் போட்ட தமிழிசை!
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பான 177.25 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பான 177.25 டிஎம்சி தண்ணீரை ஒரே நாளில் திறந்து விட வேண்டும் என்றும் அதுவும் உடனடியாக திறந்து விட வேண்டும் என்ற பொருள் கொள்ளும்படியாக ஒரு பதிவை தமிழிசை சௌந்தரராஜன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளது நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றாண்டு காலமாக காவிரி பிரச்சினை தலைவிரித்தாடி வரும் சூழலில் கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீரை ஆண்டுதோறும் திறந்து விடுமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கூடுதலாக 50 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீ்திமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இறுதி வாதங்கள் நிறைவு பெற்றிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீரை குறைத்து 177.25 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
|
டிவிட்டரில் தமிழிசை கருத்து
ஆனால் இந்த தீர்ப்பை முழுமையாக படிக்காமல் தமிழிசை சௌந்தரராஜன், தங்கள் கட்சி காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில்தான் உள்ளது என்பதை காண்பிப்பதற்காகவே தப்பும் தவறுமாக பயமுறுத்தும் வகையில் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
பாஜக பார்த்து கொணடிருக்காது
அதாவது தமிழக விவசாயிகளை கர்நாடக அரசு வஞ்சித்தால் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என்று டுவீட்டியுள்ள தமிழிசை, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையேற்று உடனடியாக 177.25 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
உடனடியாக திறக்க வேண்டும்
177.25 டிஎம்சி தண்ணீர் என்பது ஆண்டுக்கு மாதா மாதம் இவ்வளவு என பிரித்து வழங்கப்படுவது ஆகும். ஆனால் அடிப்படையான விஷயம் கூட அறியாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற நிலையில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரியுள்ளார்.
கர்நாடக அரசு
ஒரே நாளில் அவ்வளவு தண்ணீரை திறந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை கூட அறியாதவரா தமிழிசை? ஒரு விஷயத்தை கண்களை மூடிக் கொண்டும் ஆதரிப்பதும், எதிர்ப்பதும் ,உடனே வேண்டும் என்று கோருவதுமே தமிழக பாஜகவின் வேலையாக போயிற்று. மொத்த தண்ணீரையும் ஒரே நாளில் திறந்து வீணாவதற்காகவா விவசாயிகளும், தமிழக அரசும், கர்நாடக அரசும் இப்படி போராடி வருகிறது?
விவரம் அறியாமல்
இந்த டுவீட்டிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் மீது மத்திய பாஜக அரசுக்கும், தமிழக பாஜகவுக்கும் எத்தனை அக்கறை உள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. என்னம்மா விவரமே அறியாமல் அவசர கதியில் டுவீட் போட்டு இப்படி பன்றீங்களேம்மா!