எம்ஜிஆர் பிறந்தநாள்... கிண்டியில் ஓ.பிஎஸ், ஈபிஎஸ் மரியாதை!
எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள எம்ஜிஆரின் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை: அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புரட்சித் தலைவர் என்று மக்களால் அழைக்கப்படும் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கிண்டி எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உஉள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து எம்ஜிஆர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரின் திருஉருவ படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதே போன்று எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு பழனிசாமி இனிப்புகளை வழங்கினார். மேலும் நலிந்த பிரிவினருக்கு நிதியுதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.