கிரிமினல்கள் கண்டுபிடித்த வார்த்தை தான் 'ஸ்லீப்பர் செல்'... பழனிசாமி சாடல்!
கிரிமினல்கள் கண்டுபிடித்த வார்த்தை தான் ஸ்லீப்பர் செல் என்று உதகையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் பழநிகாமி பேசியுள்ளார்.
உதகமண்டலம் : கிரிமினல்கள் கண்டுபிடித்த வார்த்தை தான் ஸ்லீப்பர் செல் என்று உதகையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் பழநிகாமி பேசியுள்ளார். டிடிவி. தினகரன் இடத்தில் இருப்பவர்கள் வேண்டுமானால் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம், எங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் பத்தரை மாத்து தங்கங்கள் தான். ஏனெனில் எங்கள் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று முதல்வர் பேசியுள்ளார்.
உதகையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது : 1974ல் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட நான் அதிமுகவில் சேர்ந்தேன். கிளைக்கழக செயலாளராக பொறுப்பை தொடங்கி ஒன்றிய எம்ஜிஆர் அணிச் செயலாளராக இருந்தேன். அதன் பிறகு ஜெயலலிதா தலைமையில் கட்சி இயங்கத் தொடங்கியது மாவட்ட கழக இணைச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கழக அமைப்புச் செயலாளர் என்று பல பொறுப்புகளை ஜெயலலிதா எனக்குத் தந்தார்.
எங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டு ஜெயலலிதாவிற்கும், அதிமுகவிற்கும் உண்மையாக செயல்பட்டுள்ளோம். ஆனால் உங்களுக்கு(தினகரனுக்கு) அத்தகைய பொறுப்புகள் தரப்படவில்லை. நாங்கள் துரோகிகள் அல்ல, உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதாலும், அதிமுகவிற்கு விசுவாசத்துடன் இருப்பவர்கள் என்ற காரணத்தாலும் தான் எங்களுக்கு 2 பெரும் தலைவர்கள் ஆசியுடன் நிர்வாகிகள் துணையோடு, மக்கள் எங்களுக்கு ஆட்சியை வழங்கியுள்ளார்கள்.
ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறார்கள்
நாங்கள் உழைத்தவர்கள் மக்களால் போற்றப்படுபவர்கள், துரோகிகள் என்பவர்கள் அவர்கள் தான். கொல்லைப்புறத்தின் வழியாக வந்து கட்சியை அபகரித்து ஆட்சி கவிழ்க்கப் பார்க்கிறார்கள். அதற்குத் தக்க பாடத்தை மக்களும், கட்சியினரும் புகுத்துவார்கள்.
உங்களுடன் இருப்பவர்கள் தான் ஸ்லீப்பர் செல்
புதிதாக ஒன்று கண்டுபிடித்துள்ளார்கள், ஸ்லீப்பர் செல். இவர்கள் அரசியலுக்கு வந்த பிறகு புதுப்புது பெயர்களை வைக்கின்றனர். இந்த ஆட்சி நிலைக்க வேண்டும், அதிமுக நீடித்து நிலைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் இன்று வரை மனசாட்சியோடு கட்சியில் இருக்கின்றனர்.
உங்கள் இடத்தில் இருப்பவர்கள் வேண்டுமானால் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம், எங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் பத்தரை மாத்து தங்கங்கள் தான். ஏனெனில் எங்கள் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள் தான்.
கிரிமினல்களுக்கு அப்படித் தான் தோன்றும்
அவர்களுடன் இருப்பவர்கள் அனைவரும் பல கட்சிக்கு போய் வந்தவர்கள், அதனால் அவர்களுக்கு அப்படித் தான் எண்ணம் வரும். நல்ல எண்ணமே வராது. எங்களுக்கு எத்தனையோ சோதனை வந்த போதும் நாங்கள் இப்படியெல்லாமா பெயர் வைத்து செயல்பட்டோம்.
அமைச்சர் வீரமணி சொல்கிறார் கிரிமினல்கள் கண்டுபிடித்தது ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தை. எனவே கிரிமினல்களுக்குத் தான் அப்படித் தோன்றும். அப்படிப்பட்ட புத்தி கொண்டவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
ஆண்டவன் பார்த்துக் கொள்வான்
அவர்களின் பதவிகள் நீடிக்காது, அதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். ஆட்சியும் கட்சியும் அழிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் துடிக்கிறார், அவரோடு துணை போய் கொண்டிருக்கிறார் தினகரன். இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து தான் ஆர்கே நகரில் போட்டியிட்டார்கள், கதை என்ன ஆனது?எங்களை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தார்கள், அவர்களை மக்கள் வீழ்த்திவிட்டார்கள். 10 கட்சிகள் ஒன்று சேர்ந்து சொர்ப்ப ஒட்டுகள் தான் பெற முடிந்தது, டெபாசிட் கூட அவர்களால் பெற முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியும், ஆட்சியும் இருக்காது என்று நினைத்தவர்களுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பேசியுள்ளார்.