ஸ்டெர்லைட் உரிமத்தை புதுப்பிக்க முடியாது... கைவிரித்த மாசுகட்டுப்பாட்டு வாரியம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்து விட்டது.
Recommended Video

தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்து விட்டது. 15 நாட்கள் பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ள நிலையில் பராமரிப்புப் பணிக்குப் பிறகு மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளதோடு அந்தப் பகுதியின் இயற்கை வளமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையால் நீர் குடிக்கும் தன்மையை இழந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இந்த ஆலையினால் புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வேண்டாம் ஸ்டெர்லைட்
மனித உயிர்களுக்கும் விளை நிலங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை விதைக்கும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நீண்ட காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுமார் 640 ஏக்கரில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யவும் ஸ்டெர்லைட் நிறுவனம் முடிவு செய்திருந்தது.

58 நாட்கள் எதிர்ப்புப் போராட்டம்
இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கிய நிலையில் ஆலையின் அருகில் அமைந்துள்ள குமரெட்டியார்புரம் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 58 நாட்களாக அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு
இந்நிலையில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் பராமரிப்பு பணி காரணமாக ஸ்டெர்லைட் தாமிர ஆலை 15 நாட்களுக்கு மூடப்பட்டது. பராமரிப்பு பணி முடிந்து மீண்டும் ஆலையை திறக்க உரிமத்தை புதுப்பித்து தருமாறு ஸ்டெர்லைட் நிறுவனம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.

கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு
ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது. ஆலையை மீண்டும் திறக்க போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால் கூடுதல் ஆவணங்களைக் கோரி இந்த முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீண்டும் ஆலையை இயக்க அனுமதி கிடைக்காததால் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து மூடியே கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications